தென்காசி மாவட்டம் மேலகடையநல்லூரைச் சேர்ந்தவர், செல்லத்துரை. விவசாயியான அவருக்கும் அதே ஊரில் இந்திரா நகரில் வசிக்கும் மாடசாமி என்பவருக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்திருக்கிறது. இது தொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டுள்ளது.
29-ம் தேதி இருவருக்கும் இடையே மோதல் முற்றியதால் கைகலப்பாக மாறும் சூழல் உருவாகியுள்ளது. அதனால் செல்லதுரை கடையநல்லூர் காவல் நிலையத்துக்குச் சென்று எதிர் தரப்பைச் சேர்ந்த மாடசாமி குறித்து புகார் அளித்திருக்கிறார். இது தொடர்பாக மாடசாமியை வரவழைத்து போலீஸார் விசாரணை நடத்தியிருக்கிறார்கள்.
Also Read: தென்காசி:`நீதித்துறை மீது நம்பிக்கை உள்ளது!’ – 10 நாள்களுக்குப் பிறகு உடலை வாங்கிய உறவினர்கள்
செல்லதுரை போலீஸில் புகார் அளித்ததால், மாடசாமி ஆத்திரத்தில் இருந்துள்ளார். இந்தநிலையில், செல்லதுரையின் நாய் மாடசாமியின் நாய்க்கு வைத்துள்ள உணவைச் சாப்பிட்டு விடுவதாகத் தகராறு செய்துள்ளார். அதில், இருவருக்கும் வாக்குவாதம் முற்றியுள்ளது. அதனால், தன் நண்பர்கள் சிலருடன் சேர்ந்து செல்லதுரையை வெட்டிக் கொலை செய்திருக்கிறார்.
அங்கிருந்து, கடையநல்லூர் காவல் நிலையத்துக்குச் சென்ற மாடசாமி, போலீஸாரிடம் சரண் அடைந்துள்ளார். அவருக்கு இடது கையில் காயம் ஏற்பட்டிருப்பதால், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
விவசாயி வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாகக் கடையநல்லூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவரும் நிலையில், செல்லதுரையின் உறவினர்கள் உடலை உடற்கூறாய்வு செய்ய அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல அனுமதிக்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
போலீஸாரின் பேச்சுவார்த்தைக்குப் பின்னர், செல்லதுரையின் உடல் தென்காசி அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. கடையநல்லூரி பகுதியில் அசாதாரண சம்பவம் ஏற்பட்டு விடாமல் தடுக்கும் வகையில் பாதுகாப்புக்காக போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.