‘பாகுபலி’ பெரும்புகழ் பிரபாஸும் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவும் வைஜேயந்தி மூவீஸ் தயாரிக்கும் அறிவியல் புனைக்கதையை பின்னணியாகக் கொண்ட புதிய படத்தில் இணைந்து நடிக்கவிருக்கிறார்கள்.
‘பாகுபலி’ மெஹா ஹிட் படம் இந்தியா மட்டுமல்ல உலக அளவில் மாபெறும் வெற்றிப்படமாக பேசப்பட்டது. அதற்கடுத்து, பிரபாஸ் நடிப்பில் வெளியான ’சாஹோ’ எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. அடுத்ததாக பூஜா ஹெக்டேவுடன் இணைந்து நடித்துள்ள ’ராதே ஷ்யாம்’ வெளியாகவுள்ள நிலையில், நடிகர் பிரபாஸ், தீபிகா படுகோனேவுடன் இணைந்து நடிக்க இருப்பது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது. ஆனால், அதைவிட மிகப்பெரிய எதிர்பார்ப்பு என்றால், கடந்த ஆண்டு ’சிறந்த தெலுங்குப்படம், சிறந்த நடிகை’ ஆகிய பிரிவுகளில் தேசிய விருதுகளைக் குவித்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கைப்படமான ‘மகா நடி’ என்ற மாபெரும் வெற்றிப்படத்தை இயக்கிய ’நாக் அஸ்வின்’ இப்படத்தை இயக்குகிறார் என்பதுதான்.
வைஜெயந்தி மூவீஸ் தயாரிப்பாளர் அஸ்வினி தத் இப்படம் குறித்து பேசும்போது, “இந்திய சினிமா வரலாற்றில் எங்கள் இடத்தை உறுதிப்படுத்த இந்தப்படம் ஒரு பொன்னான வாய்ப்பு. ரசிகர்களை கவர்ந்திழுக்கும். பிரம்மாண்டமான திரைப்படமாக வெளிவருகிறது இப்படம்” என்று மெய்ச்சிலிர்த்திருக்கிறார்.
இயக்குனர் நாக் அஸ்வின், “தீபிகா நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. தீபிகா – பிரபாஸ் ஜோடி ரசிகர்களின் இதயத்திலிருந்து பல ஆண்டுகள் அகலமாட்டார்கள்” என்கிறார் நம்பிக்கையாக.
”சிலிர்ப்புக்கு அப்பால் நம்ப முடியாத பயணமாக இருக்கும்” என்று நம்புவதாக ட்விட் செய்துள்ளார் தீபிகா படுகோனே. பெயரிடப்படாத இப்படம் பிரபாஸுக்கு 21 வது படமாக வெளியாகிறது.