இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலியின் மூத்த சகோதரரான ஸ்னேஹஷிஸ் கங்குலிக்கு கொரோனோ தொற்று உறுதியாகியுள்ளது. இதன் காரணமாக சுகாதாரத்துறையின் வழிகாட்டுதல்களின்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சவ்ரவ் கங்குலி மற்றும் அவரது குடும்பத்தினர் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளனர்.
சவுரவ் கங்குலியின் சகோதரர் ஸ்னேஹஷிஸ் கங்குலி பெங்கால் அணியின் முன்னாள் முதல்தர ஆட்டக்காரராக இருந்தவர். இவர் தற்போது பெங்கால் கிரிக்கெட் அசோசியேசனின் செயலாளராகவும் உள்ளார். இவருக்கு கடந்த சில நாட்களாகவே காய்ச்சல் போன்ற உடல் தொந்தரவுகள் இருந்ததால் கொரோனொ பரிசோதனை செய்துகொண்டார்.
கடந்த புதன்கிழமையன்று இவருக்கு கொரோனோ தொற்று உறுதியான நிலையில், கொல்கத்தாவிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இவரைத்தொடர்ந்து பெங்கால் கிரிக்கெட் அசோசியேசன் தலைவரான அவிஷேக் டால்மியா மற்றும் அவருடன் தொடர்பிலிருந்த அசோசியேசன் நிர்வாகிகள் சிலரும் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளனர்.
கொரோனோ காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள இந்த ஆண்டுக்கான ஐபிஎல் லீக் போட்டிகளை எப்படி நடத்துவது, 20 -20 உலகக்கோப்பை போன்ற முக்கிய ஆலோசனைகளில் பங்கேற்றுக்கொண்டிருந்த சூழலில் சவுரவ் கங்குலி தனிமைப்படுத்திக்கொண்டுள்ளது கிரிக்கெட் ரசிகர்களையும், கங்குலியின் ரசிகர்களையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.