ஆடுகளத்தில் பந்து வீச்சாளர்களுக்கு தோனி வழங்கும் அறிவுரைகள் பற்றியும், அவருடன் களத்தில் தனக்கு நேர்ந்த சுவாரஸ்யமான அனுபவங்கள் பற்றியும் இந்திய சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் பகிர்ந்துள்ளார்.
தோனி ஒரு கேப்டனாக களத்தில் வகுக்கும் திட்டங்கள் அவ்வப்போது அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்தும். எதிரணியின் வெற்றிக்கனியை இமை இமைக்கும் நேரத்தில் தோனியின் திட்டங்கள் பறித்துச் சென்று இருக்கின்றன. குறிப்பாக பந்து வீச்சாளர்களுக்கு களத்தில் இவர் வழங்கும் அறிவுரைகள், பல நேரங்களில் இந்திய அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றிருக்கிறன. இந்நிலையில் தோனியின் திட்டங்கள் களத்தில் தனக்கு எப்படி உதவின என்பது குறித்து சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழுக்குப் அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.
அதில் அவர் கூறும்போது “ இந்திய அணியின் மிகச் சிறந்த வீரர் தோனி. களத்தில் எனக்கும் குல்தீபுக்கும் தோனி நிறைய அறிவுரைகளை வழங்குவார். சில சமயங்களில் எங்களது பந்துகளை எதிரணி பேட்ஸ்மேன் பந்தாடிக் கொண்டிருப்பார்கள். அப்போதெல்லாம் தோனி என்னிடம் வருவார். எனது தோள்கள் மீது கை வைத்து பந்தை கூக்லி முறையில் வீசச் சொல்வார். நானும் அவர் சொனனபடியே வீசுவேன். அந்த ஐடியா களத்தில் வொர்க் அவுட்டும் ஆகும்.
இது பலமுறை நடந்திருக்கிறது. இப்படிதான் ஒரு முறை தென் ஆப்பிரிக்காவுடனான போட்டியில் டுமினி பேட்டிங் செய்து கொண்டிருந்தார். நான் அவரை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்ற முனைப்பில் பந்துகளை வீசிக்கொண்டிருந்தேன். உடனே தோனி என்னிடம் வந்து ஸ்டெம்புக்கு நேராக வீசு என்று கூறினார். நானும் அதே போல வீசினேன். டுமினி அந்தப் பந்தை தடுக்க முயன்றார். ஆனால் பந்து எல்.பி.டபுள்யூ ஆனது.
அதே போல நியூசிலாந்துடனானப் போட்டியில் டாம் லாகம் புல் பார்மில் விளையாடிக் கொண்டிருந்தார். நானும் லெக் ஸ்பின், மற்றும் கூக்லி முறையில் பந்துகளை வீசிப்பார்த்தேன். ஒன்றும் வேலைக்காகவில்லை. நான் சோர்ந்து விட்டேன். நான் சோர்ந்து போனதை பார்த்த தோனி நேராக என்னிடம் வந்தார். உனது லைனை மாற்றாதே. நேராக ஸ்டம்பை நோக்கி உனது பந்துகளை வீசு என்றார். நானும் அவர் சொன்னது போலவே செய்தேன். டாம் அவுட் ஆகி விட்டார். நான் உடனே தோனியைக் கட்டிப்பிடித்துக்கொண்டேன்” என்றார்.