கொரோனாவால் உயிரிழந்த ஒருவரின் உடல் 3 மணி நேரத்திற்கும் மேலாக அடைமழையில் நடுரோட்டிலேயே கிடந்த சம்பவம் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது
கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவில் இருந்து பலர் மீண்டு வந்தாலும் உயிரிழப்புகளும் தினம்தோறும் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. இந்நிலையில் பெங்களூருவில் கொரோனாவால் உயிரிழந்த ஒருவரின் உடல் 3 மணி நேரத்திற்கும் மேலாக அடைமழையில் நடுரோட்டிலேயே கிடந்த சம்பவம் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.
பெங்களூருவின் ஹனுமந்தா நகரில் உள்ள சாலையில் 63 வயது முதியவர் ஒருவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரது குடும்பத்தினர் ஆம்புலன்ஸுக்கு போன் செய்துள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதியவர் ஆம்புலன்ஸுக்காக சாலையில் காத்திருந்த போது மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
அதன் பின்னர் 3 மணி நேரம் கழித்தே ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு வந்து முதியவரின் உடலை எடுத்துச் சென்றுள்ளது. கிட்டத்தட்ட 3 நேரமாக கொட்டும் மழையில் சாலையிலேயே முதியவரின் உடல் கண்டுகொள்ளப்படாமல் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள முதியவரின் குடும்பத்தினர் சுகாதார உதவிக்கு தொடர்பு கொண்டதாகவும் யாரும் பதிலளிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.அசோகா, ” இது மிகவும் துயரமான, துரதிர்ஷ்டவசமான சம்பவம். எந்த தாமதமும் இல்லாமல் நோயாளிகள் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட வேண்டும். என தெரிவித்துள்ளார். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்