புதுச்சேரி அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனைக்காக அழைத்து வரப்பட்ட கைதி தப்பியோடிய நிலையில் தொற்று இருப்பதை அறிந்து இரண்டு நாட்களுக்கு பின்னர் தாமாக வந்து மருத்துவமனையில் அட்மிட் ஆன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இருசக்கர வாகன திருட்டு வழக்கில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டவர் ரமணா. போலீசார் இவரை மருத்துவமனைக்கு அழைத்து வந்து கொரோனா பரிசோதனை எடுத்தனர். அப்போது அவர் மருத்துவமனையில் இருந்து தப்பியோடினார்.
இதனையடுத்து வந்த பரிசோதனை முடிவில் தப்பியோடிய குற்றவாளி ரமணாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. பின்னர் தப்பியோடிய குற்றவாளி ரமணாவை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில் ரமணா விழுப்புரம் மாவட்டம் கிடார் கிராமத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்று இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து புதுச்சேரி போலீசார் சென்று பார்த்தபோது ரமணா அங்கு இல்லாததால் அவரது உறவினர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். ரமணாவுக்கு கொரோனா தொற்று இருப்பதை அவரது உறவினர்கள் தெரிவித்ததை தொடர்ந்து ரமணா தாமாக மீண்டும் மருத்துவமனைக்கு வந்து கொரோனா வார்டில் சேர்ந்தார். அங்கு ரமணாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.