பிரபல பாலிவுட் பாடகி நேகா கக்கர் இன்ஸ்டாகிராமில் இருந்து விலகியுள்ளார்
இளம் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரது இறப்பிற்கு பிறகு பாலிவுட் திரையுலகம் ஒருவித கொந்தளிப்பிலேயே உள்ளது. குறிப்பாக சமூக வலைதளங்கள் கொதித்துக் கொண்டே இருக்கின்றன.
பாலிவுட் திரையுலகில் மிகப்பெரிய அரசியல் நடப்பதாகவும், ஸ்டார் கிட்ஸ் என்று அழைக்கப்படும் திரையுலகைச் சேர்ந்தவர்களின் வாரிசுகள் ஆதிக்கம் செலுத்துவதாகவும் இணையவாசிகள் கொதித்தனர். ஸ்டார் கிட்ஸ்களின் அரசியல் நகர்வுகளால் மன உளைச்சலுக்கு ஆளானதாலேயே சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்துகொண்டதாகவும் இணையங்களில் கருத்துகள் தீயாய் பரவின. சோனம் கபூர், அலியாபட், வருண் தவான், கரண்ஜோகர் உள்ளிட்ட சிலருக்கு எதிராக இணையவாசிகள் கருத்துகளை பதிவிட்டு வந்தனர். சில பிரலபலங்கள் இணையவாசிகளை சமாளிக்க முடியாமல் சமூக வலைதளங்களில் இருந்து விலகினர்.
‘எதிர்மறையான விஷயங்களில் இருந்து விலகி இருப்பதுதான், மன ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொள்வதற்கான முதல்படி. இப்போதெல்லாம் ட்விட்டரில்தான் எதிர்மறை விஷயங்கள் அதிகமாக இருக்கின்றன” என பதிவிட்ட நடிகை சோனாக்ஷி ட்விட்டரில் இருந்து விலகினார். அனில் கபூரின் மகள் சோனம் கபூர் இணையவாசிகளில் பதிவுகள் குறித்து தனது சமூக வலைதள பக்கங்களில் வருத்தம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் பிரபல பாலிவுட் பாடகி நேகா கக்கர் இன்ஸ்டாகிராமில் இருந்து விலகியுள்ளார்.
3.9 கோடி பேர் இன்ஸ்டாவில் அவரை பாலோ செய்யும் நிலையில் சிறந்த உலகம் உருவான பின்பு திரும்ப வருகிறேன் என குறிப்பிட்டுள்ளார். இது குறித்து இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள அவர், நான் மீண்டும் தூங்க போகிறேன். சிறந்த உலகமான சுதந்திரம், அன்பு, மரியாதை, நல்ல மக்கள், ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இவையெல்லாம் இருக்கும் உலகம் உருவான பின்பு என்னை எழுப்புங்கள். வெறுப்பில்லாத, பொறாமையில்லாத, கொலைகள் தற்கொலைகள் இல்லாத உலகம் வேண்டும். சில நாட்களுக்கு நான் போகிறேன். என தெரிவித்துள்ளார்