ஸ்டோன்பென்ச் கிரியேசன்ஸ் மூலம் கார்த்திக் சுப்புராஜ் தயாரித்திருக்கும் திரைப்படம் பென்குயின். கீர்த்தி சுரேஷ் நடிப்பில் அறிமுக இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக் இயக்கியிருக்கும் இத்திரைப்படம் இன்று அமேசான் ப்ரைமில் ரிலீஸ் ஆகியிருக்கிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பிருந்தே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உருவாகி பேசுபொருளாகியிருந்தது. 

தனது முதல் கணவன் மூலம் பெற்ற மகன் அஜய் கடத்தப்படுகிறார். அவரை கடத்தியவர் யார்? என்ன காரணம் என விரிகிறது கதை. த்ரில்லர் கதைகளுக்கான மர்ம முகமூடி அணிந்த மனிதர், கத்தி, ரத்தம் அடர்வனம் என அனைத்து அம்சங்களுடன் கதை சொல்லப்பட்டிருக்கிறது. 

image

படத்தின் துவக்கத்தில் சிறிது நேரம் கதை தெளிவாக புரியவில்லை. பிறகு காட்சிகள் விரிய விரிய மிக எளிமையாக ஆடியன்ஸ் கதைக்குள் பயணிக்க முடிகிறது. வழக்கம் போலவே குழந்தைகளை கடத்தும் சைக்கோ கொலைகாரன் துவக்கத்தில் நல்லவன் போல கதாபாத்திரங்களுக்கு இடையில் உலாவுவதும் ஒரு கட்டத்தில் அவன் தான் கொலைகாரன் என சன்ஸ்பன்ஸ் உடைவதும் என தமிழ் சினிமா ரொம்பகாலமாக அரைத்த அதே மாவை இந்தப் படத்தில் அரைத்திருக்கிறார்கள். 

மகாநடி மூலம் தன்னை அருமையாக நிரூபித்தார் கீர்த்தி சுரேஷ். அவருக்கு அப்படத்திற்காக தேசிய விருதும் கிடைத்தது. அப்படியிருக்க, அவர் முன்னணி கதாபாத்திரத்தில் நடக்கும் படம் என்பதால் தமிழ்,தெலுங்க இரு மொழிகளில் ரசிகர்கள் மத்தியில் அவ்வளவு எதிர்பார்ப்பு இருந்தது. அம்மா என்றால் புனிதம் என நீண்டகாலமாக தமிழ் சினிமா நம்பியிருக்கும் பார்முலா இந்த முறை ஏமாற்றிவிட்டது. சந்தோஷ் நராயணனின் இசை இதம். 

image

குழந்தை கடத்தலுக்கு பின்னால் இருக்கும் மற்றுமொரு காரணம் ‘அட இதுக்குப் போயா’ என சொல்ல வைக்கிறது. படத்தில் வந்து போகும் போலீஸ், டாக்டர் என யாருமே உயிர்ப்புடன் கதையில் ஒன்றி நடிக்கவில்லை. கார்த்திக் பழனியின் ஒளிப்பதிவு ரசிக்க வைக்கிறது. வில்லனும், கீர்த்தி சுரேஷும் போலீஸ் கஸ்டடியில் விளையாடும் வார்த்தை விளையாட்டும் அத்தனை போலித்தனம். சினிமாவில் செயற்கைத் தனம் இருக்கலாம். சினிமா என்பதே செயற்கைத் தனம் தான். படம் இயல்பாக இல்லை நம்பும் படியாக இல்லை என சொல்லக் கூடாது காரணம் அது தான் சினிமா. ஆனால் போலித்தனம் கூடவே கூடாது. இப்படத்தின் கதையை பெரிதாக நம்பிய இயக்குநர், கதாபாத்திரத் தேர்வில் மொத்த கவனத்தையும் தவறவிட்டுவிட்டார். 

டெக்னிக்கலான விசயங்களை ரசிப்பவர்களுக்கு இப்படம் நல்ல விருந்து தான். மொத்த சினிமாவையும் கீர்த்தி சுரேஷ் மட்டுமே தன் நடிப்பால் தாங்கி நிற்கிறார். நல்ல தொழில்நுட்ப அம்சங்கள் இருக்கும் இவ்வகை த்ரில்லர் படங்களை திரையரங்கில் பார்க்கும் போது கிடைக்கும் திருப்தி வேறு OTT’ல் பார்க்கும் போது கிடைக்கும் உணர்வு வேறு. OTT’ல் திரில்லர் படங்களின் அடர்த்தியை ரசிகர்களுக்கு அத்தனை எளிதாக கடத்திவிட முடியாது. இந்த பிரச்னையை பென்குயினும் சந்தித்திருக்கிறது. ஒரு சைக்கோ கொலை காரனுக்கு ஏன் சார்லி சாப்ளினின் உருவத்தை கொடுத்தார்கள் என்பது புரியவில்லை. அடுத்த முயற்சியில் இயக்குநர் தன்னை மேலும் மெருகேற்றிக் கொள்வார் என நம்புவோம்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.