தோனியின் சுயசரிதை படத்தில் நடித்த இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் இன்று மும்பையில் அவரது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது இந்தியத் திரையுலகத்தை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. பல்வேறு துறையைச் சார்ந்தவர்களும் சுஷாந்துக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பாலிவுட்டின் அடுத்த ஷாருக்கான் எனப் புகழப்பட்ட சுஷாந்தின் திரைப் பயணத்தைச் சற்றே திரும்பிப் பார்ப்போம். சுஷாந்த் பீகார் மாநிலம் பாட்னாவில் 1986 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 21 ஆம் தேதி பிறந்தார். சின்னத்திரை தொடர்கள் மூலம் நடிப்புலகில் அறிமுகமான இவர் ‘தேஷ் மேன் ஹாய் மேரா தில்’ என்ற தொடரில் முதன் முதலில் நடித்தார். பின் 2009- ஆம் ஆண்டு பவித்ர ரிஷ்தா என்ற தொடரின் மூலம் பலரது கவனத்தையும் ஈர்த்தார்.
2013 ஆ ம் ஆண்டு, எழுத்தாளர் சேத்தன் பகத் எழுதிய ‘த்ரீ மிஸ்டேக்ஸ் ஆஃப் மை லைஃப் ‘( 3 mistakes of my life) என்ற புத்தகத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ‘கை போ சே’ (Kai Po Che) மூலம் நாயகனாகப் பாலிவுட்டில் அறிமுகமானார். தொடர்ந்து ‘ஷுத் தேஸி ரொமான்ஸ்’, ‘டிடெக்டிவ் ப்யோம்கேஷ் பாக்ஷி’ ஆகிய படங்கள் மூலம் பாலிவுட்டின் முக்கிய நடிகர்களில் ஒருவராகக் குறுகிய காலத்தில் வளர்ந்தார். ஆமிர்கானின் ‘பிகே’ படத்திலும் துணை கதாபாத்திரத்தில் அனுஷ்கா சர்மாவின் காதலனாக நடித்திருந்தார்.
அவர் வாழ்வின் முக்கியத் திருப்புமுனையாக 2016 ஆம் ஆண்டு அமைந்தது. இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கை அனுபவங்களைச் சொல்லும் விதமாக உருவாக்கப்பட்ட ‘எம்.எஸ்.தோனி தி அண்ட்லோட் ஸ்டோரி’ (MS Dhoni: The Untold Story) திரைப்படம் பல மொழிகளில் வெளியாகி நாடு முழுவதும் பிரபலமடையச் செய்தது. கடைசியாக இவர் நடித்து திரையரங்கில் வெளியான திரைப்படம் ‘சிச்சோரே’ (2019). இந்தப் படத்தின் விமர்சனங்கள் சுஷாந்தின் நடிப்பைப் பாராட்டியிருந்தன. அவருக்கு நல்ல பெயரையும் பெற்றுத்தந்தது.
‘தி ஃபால்ட் இன் அவர் ஸ்டார்ஸ்’ என்கிற ஆங்கில நாவலைத் தழுவி ஏ.ஆர்.ரகுமான் இசையில் எடுக்கப்பட்ட ‘தில் பெசாரா’ (Dil Bechara) என்ற படத்தில் சுஷாந்த் நாயகனாக நடித்திருந்தார். இப்படம் வெளியீட்டுக்காகத் தயாராக இருக்கிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்ததும் “தில் பெசாரா” படம் வெளியாகும். ஆனால் அதனைக் காண சுஷாந்த் இருக்க மாட்டார் என்பதால் அவரது ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.