வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு இன்ஸ்டாகிராமில் ரசிகர் ஒருவரின் வேண்டுகோளை ஏற்று பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் ரூ.1 கோடி கொடுத்தவர்.
தோனியின் சுயசரிதை படத்தில் நடித்த இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் இன்று மும்பையில் அவரது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது இந்தியத் திரையுலகத்தை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. பல்வேறு துறையைச் சார்ந்தவர்களும் சுஷாந்துக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கேரள வெள்ளத்தின்போது அவர் செய்த உதவிகளை சமூக வலைத்தளத்தில் பலரும் நினைவுக் கூறி வருகின்றனர்.
கேரளா வெள்ளத்தில் சிக்கித் தவித்தபோது சுஷாந்த் சிங் பல சேவைகளைச் செய்துள்ளார். அவர் தனது நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் அடங்கிய சில குழுக்களைக் கேரளாவின் சில மாவட்டங்களுக்கு அனுப்பினார். அவர்கள் அங்கு நிவாரணப் பணிகள் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாகக் கேரளா வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையான மருத்துவச் சிகிச்சை அளிக்கும் வகையில் அந்தக் குழு செயல்பட்டது. இதற்காக சுஷாந்த ரூ.25 லட்சம் மதிப்புள்ள மருத்து, மாத்திரைகளை அனுப்பினார். அத்துடன் மருத்துவ உதவி அல்லது நிதியுதவி வழங்க நினைப்பவர்கள், தங்கள் குழுவைத் தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவித்து பலரையும் நெகிழச் செய்தார்.
அப்போது சுஷாந்தை சமூக வலைத்தளத்தில் பின்தொடரும் அவரது ரசிகர் ஒருவர், “என்னிடம் பணம் இல்லை. ஆனால் கேரள மக்களுக்கு நான் உணவு வழங்க நினைக்கிறேன். நான் எப்படி உதவி செய்வது தயவுசெய்து சொல்லுங்கள்” எனக்கேட்டுள்ளார். இதையடுத்து அந்த ரசிகரின் பெயரில் ரூ.1 கோடியை சுஷாந்த் நிவாரண நிதியாகக் கேரளாவிற்கு அனுப்பினார். அத்துடன் ‘ஒரு கோடி ரூபாயை உங்கள் பெயரில் அனுப்பிவிடுகிறேன், அது எங்கள் மீட்புக்குழுவிடம் சென்று கேரள மக்களுக்குச் சென்றுவிடும்” எனவும் தனது ரசிகருக்குப் பதிலளித்தார். இத்தகைய கொடையுள்ளம் கொண்டவர் இப்போது நம்மிடம் இல்லை எனப் பலரும் பேசியும் எழுதியும் வருகிறார்கள்.