பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த சில மாதங்களாக மன அழுத்தத்தில் பாதிக்கப்பட்டிருந்ததாக காவல்துறையின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.
தோனியின் சுயசரிதை படத்தில் நடித்த இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் இன்று மும்பையில் அவரது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது இந்தியத் திரையுலகத்தை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. பல்வேறு துறையைச் சார்ந்தவர்களும் சுஷாந்துக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் 34 வயதான சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த 6 மாதங்களாகத் தீவிர மன அழுத்தத்திலிருந்ததாக காவல்துறையின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு சுஷாந்த் சிங் ராஜ்புத்திடம் மேலாளராக இருந்த திஷா சலியன் தற்கொலை செய்துகொண்டார். அவருக்கு வயது 25. கர்நாடகாவின் உடுப்பி பகுதியைச் சேர்ந்த அவர், மும்பையில் வசித்து வந்தார். திஷாவுக்கு ரோஹன் ராய் என்பவருடன் நிச்சயதார்த்தம் முடிந்திருந்தநிலையில் அவருடன் தான் வசித்து வந்தார். அவர், ஜூன் 8-ம் தேதி 14-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
இந்தச் சம்பவம் பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. திஷா தற்கொலை விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், சுஷாந்த் சிங் ராஜ்புத்தும் தற்கொலை செய்துகொண்டது பாலிவுட் வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. திஷாவின் மரணத்துக்குக் கூட சுஷாந்த் சிங் ராஜ்புத் இரங்கல் தெரிவித்து, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.