சச்சின் 100-வது சதம் அடிக்க வேண்டிய போட்டியில் அவரை அவுட் செய்ததால் தனக்கு கொலை மிரட்டல்கள் வந்ததாக இங்கிலாந்து பவுலர் டிம் பிரெஸ்னன் தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் உலகின் தலைசிறந்த பேஸ்ட்மேன் எனப்படும் இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது 99-வது சர்வதேச சதத்தை 2011-ஆம் ஆண்டு உலகக் கோப்பையின்போது தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் அடித்தார். பின்னர் எப்போது அவர் 100வது சதம் அடிப்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. அதே ஆண்டில் இங்கிலாந்துக்கு எதிராக ஓவல் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் சச்சின் 90 ரன்களை கடந்தார். ஆனால் 91 ரன்கள் எடுத்திருந்த போது இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிம் பிரெஸ்னன் வீசிய பந்தில் அவர் எல்.பி.டபுள்யூ (LBW) அவுட் ஆனார். அந்த விக்கெட்டை ஆஸ்திரேலிய நடுவரான ராட் டக்கெர் கொடுத்திருந்தார்.
உண்மையில் அந்தப் பந்து சச்சின் காலில் படவில்லை என அப்போது சர்ச்சையானது. இந்த விவகாரம் தொடர்பாக இங்கிலாந்து வீரர் டிம் பிரெஸ்னன் தற்போது மனம் திறந்துள்ளார். கிரிக்கெட் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர், 2011ஆம் ஆண்டு சச்சினை அவுட்டாக்கிய பின்னர், சில நாட்களில் தனக்கு கொலை மிரட்டல்கள் வந்ததாக தெரிவித்துள்ளார். தனக்கு மட்டுமின்றி நடுவர் டக்கெருக்கும் கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டதாக கூறியுள்ளார். இதனால் இருவருமே தங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக்கூறி காவல்துறை பாதுகாப்பிற்கு விண்ணப்பித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
2011-ஆம் ஆண்டிற்குப் பின்னர் நீண்ட நாட்களாக சதம் அடிக்காத சச்சின் டெண்டுல்கர் இறுதியில் 2012-ஆம் ஆண்டு ஆசிய கோப்பையில் வங்கதேச அணிக்கு எதிராக தனது 100வது சதத்தை பதிவு செய்தார். அதன்பின்னர் 2013ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சச்சின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். இதுவரை கிரிக்கெட் வரலாற்றில் சச்சினை தவிர எந்த பேட்ஸ்மேனும் 100 சர்வதேச சதங்களை அடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.