நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே சிங்கநேரி கிராமம் உள்ளது. அங்குள்ள கண்ணன் (45) என்பவர் விவசாயம் செய்து வந்தார். இவரின் சகோதரி மகள் காவ்யா. இவர் பெருமளஞ்சி கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று ஹால் டிக்கெட் வழங்கப்படும் என்றும் அந்தந்த பள்ளிகளுக்குச் சென்று பெற்றுக் கொள்ளலாம் எனவும் கல்வித்துறை சார்பாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதனால் காவ்யா தன்னுடைய ஹால் டிக்கெட்டைப் பெறுவதற்கு மாமா கண்ணனுடன் பள்ளிக்குச் செல்ல இருந்தார்.
கண்ணன் வெளியூர் செல்ல இருப்பதை அறிந்த அவரின் மகன் சபரீசன், தானும் தந்தையுடன் வருவதாக அடம்பிடித்துள்ளார். அத்துடன், கண்ணனின் அண்ணன் மகள் மனீஷா என்ற ஒன்பது வயது மாணவியும் உடன் வருவதாகத் தெரிவித்திருக்கிறார்.

அதனால் கண்ணனுடன் அவரின் மகன், அண்ணன் மகள், அக்கா மகள் காவ்யா ஆகிய நான்கு பேர் சென்றிருக்கிறார்கள். பெருமளஞ்சியில் உள்ள பள்ளிக்குச் சென்ற அவர்கள், காவ்யாவின் ஹால் டிக்கெட் வாங்கிக்கொண்டு வீட்டுக்குத் திரும்பியுள்ளனர்.
நான்கு பேரும் ஒரே பைக்கில் சென்ற நிலையில், ஏர்வாடி அருகே தங்கள் கிராமத்துக்குச் செல்வதற்காக நான்கு வழிச்சாலையை கடக்க முயன்றிருக்கிறார்கள். அப்போது நாங்குநேரியில் இருந்து வள்ளியூர் நோக்கிச் சென்ற கார் எதிர்பாராதவிதமாக இரு சக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளது.

இதில் நால்வரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்துள்ளனர் . உடனடியாக அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு மருத்துவ சிகிச்சைக்காக நாகர்கோவில் அனுப்பி வைத்தனர் . ஆனால், நாகர்கோவில் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே கண்ணன், அவரின் அண்ணன் மகள் மனீஷா ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.
விபத்தில் படுகாயமடைந்த மாணவி காவ்யா, கண்ணனின் மகன் சபரீசன் ஆகியோர் சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்த கண்ணன், மனீஷா ஆகியோரின் உடல்கள் உடற்கூறு ஆய்வுக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டது.

ஹால் டிக்கெட் வாங்கச் சென்றபோது நடந்த விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. நான்கு பேர் ஒரே பைக்கில் சென்ற சம்பவம் பற்றி பலரும் விமர்சித்து வருகிறார்கள்.
இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த ஏர்வாடி போலீஸார், காரை ஓட்டிச் சென்று விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர் முத்துக்குமாரை கைது செய்தனர்.