பெற்ற மகனால் தெருவில் கைவிடப்பட்ட 70 வயது பாட்டிக்கு ரயில்வே அதிகாரி ஒருவர் உணவளித்து, பத்திரமாகச் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்துள்ளச் சம்பவம் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.
லீலாவதி கேதர்நாத் துபே (70) என்பவரது மகன் தினேஷ் குமார் துபே. இவர் மும்பையில் ஆட்டோ ஓட்டிவந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் நோய்வாய்ப்பட்ட தினேஷ், உடல்நலக் குறைவால் கடுமையாக அவதிப்பட்டு வந்துள்ளார். இதனைக் கேள்விப் பட்ட அவரது தாய் லீலாவதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதற்குச் சற்று முன்னர் மும்பைக்குச் சென்று மகனைக் கண்ணும் கருத்துமாகக் கவனித்து வந்துள்ளார். தாயின் அரவணைப்பு மற்றும் சிகிச்சையால் உடல் நிலை தேறிய தினேஷ் தாயுடன் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார். ஒரு கட்டத்தில் லீலாவதியை வீட்டை விட்டு வெளியே செல்லுமாறுக் கூறி மூர்க்கமாகத் தாக்கியுள்ளார்.
இதனால் வேதனையில் தவித்து வந்த லீலாவதி வீட்டை விட்டு வெளியேறி மும்பையின் மஹுல் நகர் முதல் பாந்த்ரா வரை கிட்டத்தட்ட 13 கிலோ மீட்டர்கள் நடந்தே வந்துள்ளார். அவரிடம் இருந்த பணமும் தீர்ந்து விட்டதால் பசியால் அவதிப்பட்டு வந்த லீலாவதிக்கு லாரியில் சென்ற சில நபர்கள் பிஸ்கட்டுகளையும் தண்ணீரையும் கொடுத்துள்ளனர்.
இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைத் தளங்களில் வெளியாகி வைரலானது. இந்த வீடியோ மும்பை ரயில்வே போக்குவரத்து அதிகாரி சுஹானி மிஸ்ரா கவனத்திற்கும் சென்றது. இதனையடுத்து காவல்துறை உதவியுடன் லீலாவதியை மீட்டுக்கொண்டுவந்த அவர் அந்தப் பாட்டிக்கு உணவு மற்றும் தங்குவதற்கு இருப்பிடத்தை அளித்து உதவியுள்ளார். இதனைத் தொடர்ந்து அவரது சொந்த ஊரான டெல்லிக்குச் செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்த மிஸ்ரா, அவருக்கு ஏசி பெட்டியில் டிக்கெட்டையும் புக் செய்து பத்திரமாக அனுப்பி வைத்துள்ளார்.
இது குறித்து லீலாவதி கூறும் போது “எனது மகனுடன் தங்கியிருந்த நாட்களில் நான் சாப்பிட்ட உணவுக்குப் பணத்தைக் கொடுத்து விட்டேன். இருப்பினும் அவன் கடந்த மூன்று மாதங்களாகத் தொடர்ச்சியாக என்னை அடித்துத் துன்புறுத்தி வீட்டைவிட்டு வெளியேறுமாறு கூறினான். அதனால் நான் வீட்டை விட்டு வெளியேறும் சூழ்நிலை ஏற்பட்டது.
நான் வீட்டை விட்டு வெளியேறும் போது, எனக்கு எங்கே செல்வது என்றே தெரியவில்லை. என்னிடம் பணம் கூட இல்லை. ஒரு லாரியில் சென்றவர்கள் எனக்கு பிஸ்கட்டுகளையும், தண்ணீரையும் கொடுத்தனர். அதன் பின்னர் என்னை மீட்ட ரயில்வே அதிகாரிகள் எனக்குச் சூடான உணவையும், தங்குவதற்கு இடத்தையும் அளித்தனர். அதில் ஒரு அதிகாரி என்னுடைய மகன் என்னிடம் வந்து பேசுவார் என்று கூறினார். இப்போது ரயில்வே அதிகாரிகள் எனது குடும்பத்தினர் ஆகிவிட்டனர். அவர்களுக்காக நான் கடவுகளிடம் வேண்டிக்கொள்ள மட்டுமே முடியும் எனக் கூறினார்.