கேரளாவில் பாம்பு கடித்து பெண் உயிரிழந்த விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் அஞ்சல் பகுதியைச் சேர்ந்தவர் சுராஜ். இவரது மனைவி உத்திரா(25).மே மாதம் 6-ம் தேதி பாம்பு கடித்து உயிரிழந்துள்ளார். ஆனால் உத்திராவின் மரணத்தில் அவரது தந்தைக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் கடந்த மார்ச் மாதமும் உத்திராவுக்கு பாம்பு கடித்து தீவிர சிகிச்சைக்குப் பின் உயிர் பிழைத்தார். இந்நிலையில் இரண்டு மாதங்கள் கழித்து மீண்டும் பாம்புக் கடித்ததால் அவர் சந்தேகம் அடைந்து போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
இதனை அடுத்து போலீசார் சுராஜை அழைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் போலீசாருக்கு கிடைத்தன. தனது மனைவியின் சொத்துக்களை கைப்பற்றி இன்னொரு திருமணம் செய்வதற்காகவே இந்த பாம்புக்கடி நாடகத்தை சுராஜ் நிகழ்த்தியுள்ளார். கடந்த மார்ச் மாதம் சுரேஷ் என்பவரை சந்தித்த சுராஜ், ரூ.15ஆயிரம் கொடுத்து அணலி வகை பாம்பை வாங்கியுள்ளார். அதனை தன் மனைவியின் படுக்கையில் வைத்து கடிக்க விட்டுள்ளார்.
(மாதிரிப்படம்)
ஆனால் தீவிர சிகிச்சைக்கு பிறகு உத்திரா உயிர் பிழைத்துவிட்டார். இதனால் மீண்டும் திட்டமிட்ட சுராஜ், மூர்க்கன் வகை பாம்பை ரூ.10ஆயிரம் கொடுத்து வாங்கி மீண்டும் கடிக்கவிட்டுள்ளார். இந்த முறை சிகிச்சை பலனின்றி உத்திரா உயிரிழந்துவிட்டார். இதனை அடுத்து சுராஜை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் விஷப்பாம்பு கொடுத்து கொலைக்கு உதவிய சுரேஷைப் பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஏழ்மையில் ஆட்டோ ஓட்டுநர் : ரமலானுக்காக உண்டியல் பணத்தைக் கொடுத்த மாணவி