தன் அணியினரை மிகவும் மிஸ் செய்வதாக இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
லா லிகாவின் ஃபேஸ்புக் பக்கத்தில் கால்பந்து தொகுப்பாளர் ஜோ மோரிசனுடன் இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா கலந்துரையாடினார். அதில் பேசிய அவர், “நண்பர்களாகிய நாங்கள் வீடியோ கால், வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் தொடர்பில் இருக்க முயற்சிக்கிறோம். நான் என் அணியினரை மிகவும் மிஸ் செய்கிறேன். அவர்களுடன் அடிக்கும் அரட்டையை மிஸ் செய்கிறேன். 365 நாட்களில் கிட்டத்தட்ட நாங்கள் 300 நாட்கள் ஒன்றாகவே பயணிக்கிறோம்.
நாங்கள் விளையாடுகிறோம், ஒன்றாக பயணம் செய்கிறோம், எனவே இது ஒரு குடும்பத்தைப் போன்றது. எனவே நான் செய்ய விரும்பும் முதல் விஷயம் என்னவென்றால், இவர்களையெல்லாம் இணைத்து உடனடியாக மீண்டும் கிரிக்கெட் விளையாட தொடங்க வேண்டும்” என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
இது குறித்து மேலும் தொடர்ந்த ரோகித் சர்மா ” “பொதுமுடக்கம் தொடங்குவதற்கு முன்பு நான் விளையாட கிட்டத்தட்ட தயாராக இருந்தேன். அந்த வாரம் முழுவதும் எனது உடற்தகுதி சோதனையாக இருக்கப்போகிறது என நினைத்தேன். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவ்வாறு நடக்கவில்லை. பொதுமுடக்கம் முடிந்ததும் நான் விளையாட்டு மைதானத்திற்குச் சென்று எனது உடற்பயிற்சி பரிசோதனையை மேற்கொள்வேன். நான் எனது உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று எனது அணியுடன் மீண்டும் விளையாடுவேன்” எனத் தெரிவித்தார்.
ரசிகர்கள் பற்றி கூறிய ரோகித் “உலகெங்கிலும் உள்ள எந்த விளையாட்டு நிகழ்வுகளுக்கும் ரசிகர்கள் மிகவும் முக்கியம். அவர்களின் முக்கியத்துவத்தை தற்போது உணர முடிகிறது. ஆனால் இந்த நேரத்தில் மக்களின் பாதுகாப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.” எனக் குறிப்பிட்டுள்ளார்.