இங்கிலாந்தில் பணிபுரிந்து வந்த டெல்லியைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் கொரோனாவினால் உயிரிழந்துள்ளார்.
டெல்லியைச் சேர்ந்த 55 வயதான மருத்துவர் பூர்ணிமா நாயர். இவர் ஒரு கேரளப் பெண். இவர் இங்கிலாந்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மையத்தில் மருத்துவராகப் பணி புரிந்து வந்தார். இந்நிலையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி இவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பூர்ணிமாவின் இறப்பு குறித்து மருத்துவமனை வளாகம் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் “ எங்களின் மதிப்புமிக்க தோழியான பூர்ணிமா நாயர் கொரோனாவிற்குப் பலியாகி விட்டார் என்பதை மிகவும் வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். அவர் கொரோனாவை தனது முழு பலம் கொண்டு எதிர்த்தார். அவரின் இறப்புச் செய்தி எங்கள் இதயத்தைச் சுக்கு நூறாக நொறுக்கிவிட்டது. அவரின் ஆத்மா சாந்தியடைய எங்களுடன் சேர்ந்து நீங்களும், பிரார்த்தனை செய்வீர்கள் என நம்புகிறோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மருத்துவமனை மட்டுமல்லாது பல ஆண்டுகளாகப் பூர்ணிமாவிடம் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் பலர் அவரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்தனை செய்கிறோம் எனக் கூறியுள்ளனர்.