சிஎஸ்கே – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதும் போட்டிகள் இந்தியா – பாகிஸ்தான் விளையாடும் போட்டிகளைப் போன்றது என்று இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
இப்போது சிஎஸ்கே அணிக்காக விளையாடி வரும் ஹர்பஜன் சிங் ஒரு காலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடியவர். ஒரு சில போட்டிகளுக்கு ஹர்பஜன் சிங் மும்பை அணிக்கு கேப்டனாகவும் செயல்பட்டிருக்கிறார். என்றைக்கு சிஎஸ்கே அணிக்காக விளையாட ஆரம்பித்தாரோ அன்று முதல் தமிழில் ட்வீட் போடுவது என அமர்க்களப்படுத்தி வருகிறார் சிங்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பேட்டியளித்துள்ள ஹர்பஜன் சிங் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்துள்ளார், அதில் ” சிஎஸ்கே ஜெர்சியை முதலில் அணிந்தபோது விசித்திரமாக இருந்தது. என்னது இது? கனவுதானா என முதலில் எண்ணினேன். எப்போதெல்லாம் மும்பை இந்தியன்ஸ் அணி சிஎஸ்கேவுடன் மோதுகிறதோ அப்போதெல்லாம் இந்தியா – பாகிஸ்தான் ஆட்டமாகவே பார்க்கப்படும். அப்போது இரு அணிகளுக்கும் ஆட்டம் சவாலானதாகவே இருக்கும். திடீரென மும்பை அணி ஜெர்சியை அணியாமல் சென்னை அணியின் ஜெர்சியை அணிந்தபோது எனக்குக் கடினமாக இருந்தது. இதற்குப் பழகுவதற்குச் சிறிது நாட்கள் ஆனது” என்றார்.
மேலும் தொடர்ந்த ஹர்பஜன் ” 2018 இல் முதலிலேயே மும்பைக்கு எதிராக விளையாடினோம். அதனால் நல்லவேளை இந்த ஆட்டம் சீக்கிரமே நடந்து முடிந்தது எனத் தோன்றியது. முதல் சீஸன் முழுக்க எனக்கு விசித்திரமாகவே இருந்தது. இரண்டாவது சீஸனில் அந்தளவுக்கு இல்லை. அதன் பிறகு, கோப்பையை வென்றோம். இரண்டாவது சீசனில் இறுதி வரை வந்தோம், ஆனால் கோப்பையை வெல்லவில்லை என்றாலும் சிறப்பாகவே இருந்தது” என்றார் அவர்.