கன்னியாகுமரி மாவட்டத்தில் டெல்லி சென்று வந்த 4 பேர், சென்னை விமான நிலையத்தில் பணியில் இருந்த ஒருவர் என 5 பேருக்குக் கடந்த மார்ச் மாதம் இறுதியில் கொரோனா உறுதி செய்யப்பட்டது. கொரோனா பாதித்த நபர்கள் வசித்த நாகர்கோவில், வெள்ளாடிச்சிவிளை, ஈத்தாமொழி, தேங்காப்பட்டணம் பகுதிகள் மூடப்பட்டன. இதைத் தொடர்ந்து 5 பேரின் உறவினர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால், கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்தது. அனைவரும் நாகர்கோவிலை அடுத்த ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தனர். பின்னர் அவர்கள் படிப்படியாக டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இறுதியாக இன்று 3 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதன் மூலம் கன்னியாகுமரி மாவட்டம் பச்சை மண்டலமாக மாறும் என மக்கள் நினைத்தனர். ஆனால், இன்று கன்னியாகுமரி மாவட்டம் வந்த 6 பேருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரும் அனைத்து வாகனங்களும் மாவட்ட எல்லையான ஆரல்வாய்மொழியில் சோதனை செய்யப்படுகின்றன. அதில் யாருக்கேனும் கொரோனா அறிகுறி தெரிந்தால், அவர்கள் தனியார் கல்லூரிகளில் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். பின்னர், அவர்களுக்குக் கொரோனா சோதனை செய்யப்பட்டு நெகட்டிவ் ரிசல்ட் வந்தால் வீட்டுக்கு அனுப்பிவைக்கப்படுவார்கள். பாசிட்டிவ் ரிசல்ட் வந்தால் அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்க்கப்படுகிறார்கள்.
நேற்று ஆரல்வாய்மொழி செக்போஸ்டில் சோதனை செய்தபோது 6 பேருக்குக் கொரோனா அறிகுறி இருப்பது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களின் மாதிரிகள் சோதனை செய்தபோது அவர்களுக்குக் கொரோனா இருப்பது உறுதியானது. அதில், கேரள மாநிலம் காரக்கோணம் பகுதியைச் சேர்ந்த 5 வயதுப் பெண் குழந்தை, ஒருவர் அறந்தாங்கியைச் சேர்ந்தவர். 2 பேர் நாகர்கோவிலைச் சேர்ந்தவர்கள், ஒருவர் குளச்சல் அருகே கல்லுக்கூட்டத்தைச் சேர்ந்தவர் மற்றொருவர் தென் தாமரைக்குளத்தைச் சேர்ந்தவர்.
இதுகுறித்து ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி கொரோனா நோய் நோடல் அதிகாரி டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், “கேரளத்தைச் சேர்ந்த குழந்தை சொந்த ஊருக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அறந்தாங்கியைச் சேர்ந்தவரும் அவரது சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார். மற்ற 4 பேரும் ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். சிகிச்சையில் உள்ள யாருக்கும் கொரோனாவுக்கான அறிகுறிகள் எதுவும் இல்லை. குமரி மாவட்டத்தில் புதிதாக வந்த 4 பேர் மட்டுமே கொரோனா சிகிச்சையில் உள்ளனர்” என்றார்.
Also Read: `ஜூன், ஜூலையில் கொரோனா பாதிப்பு உச்சத்தைத் தொடும்!’ – எச்சரிக்கும் எய்ம்ஸ் இயக்குநர்
கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் வீடுகள் இருக்கும் வெட்டூர்ணிமடம், ராமபுரம், கல்லுக்கூட்டம், தென் தாமரைக்குளம் ஆகிய பகுதிகள் சீல் வைக்கப்பட்டன. அதில் தென் தாமரைக்குளத்தைச் சேர்ந்த கொரோனா பாதித்த கல்லூரி மாணவியின் வீடு போலீஸ் ஸ்டேஷனுக்கு நேர் எதிரில் அமைந்துள்ளது. போலீஸ் ஸ்டேஷனுக்குப் பொதுமக்கள் மற்றும் போலீஸ் வாகனங்கள் வரும் என்பதால் பாதுகாப்பு கருதி போலீஸ் ஸ்டேஷன் மூடப்பட்டது. தற்காலிகமாக சாமிதோப்பில் உள்ள போலீஸ் குடியிருப்புக்குக் காவல் நிலையம் மாற்றப்பட்டுள்ளது.