ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் தோனியின் பாதையை பின்பற்றி திறமையான புது வீரர்களை உருவாக்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் காம்பீர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வரும் கவுதம் காம்பீர் அவ்வப்போது கிரிக்கெட் தொடர்பான தனது கருத்துகளை வெளிப்படையாக பேசி வருகிறார். அப்படிதான் “ஸ்போர்ட்ஸ் டாக்” இணையதளத்துக்கு பேசியுள்ள காம்பீர் பல்வேறு விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் “ரோகித் இப்போது மிகப்பெரிய பேட்ஸ்மேனாக இருப்பதற்கு காரணம் தோனி மட்டுமே.
தேர்வாளர்கள் மீது நாம் எவ்வளவு வேண்டுமானாலும் விமர்சனம் வைக்கலாம். ஆனால் ஒரு வீரர் அணியில் இருக்க வேண்டுமென்றால் அதற்கு கேப்டனின் ஆதரவும் முக்கியம். எல்லாமே கேப்டனின் கையில்தான் இருக்கிறது. அப்படிதான் ரோகித் சர்மாவுக்கு தோனி ஆதரவு அளித்தார். எனக்கு தெரிந்து எந்தவொரு வீருக்கும் இவ்வளவு ஆதரவு அவர் கொடுத்ததில்லை” என்றார்.
மேலும் தொடர்ந்த அவர் “இப்போதுள்ள இளம் தலைமுறையான சுப்மண் கில், சஞ்சு சாம்சன் ஆகியோருக்கும் இதேபோன்ற ஆதரவு இருக்கிறது. இப்போது ரோகித் சர்மா ஒரு சீனியர் வீரர். நான் அவரிடம் எதிர்பார்ப்பது என்னவென்றால், இப்போதுள்ள இளம் தலைமுறையினருக்கு அவர் ஆதரவளிக்க வேண்டும். கேப்டனின் ஆதரவு இருந்தால் எத்தகைய உயரம் செல்லலாம் என்பதற்கு ரோகித்தே சரியான உதாரணம். இப்போது அவர் அசாதாரணமான வீரராக உயர்ந்திருக்கிறார். தோனியிடம் எனக்கு மிகவும் பிடித்த விஷயம் ரோகித் அணியில் இல்லாதபோதும் அவர் தொடர்பிலேயே இருந்தார். அவரை எப்போதும் தோனி ஓரம்கட்டியதில்லை” என பெருமையாக தெரிவித்தார் காம்பீர்.
ரோகித் குறித்து மேலும் பேசிய காம்பீர் “உலகக் கோப்பை போட்டியில் 5 சதங்கள் அடிப்பது என்பது சாதாரணமான விஷயமல்ல. அதேபோல ஒருநாள் போட்டியில் 3 இரடை்டைச் சதங்கள். இப்போதுள்ள சர்வதேச வீரர்களில் ரோகித் சர்மாவே சிறந்தவர். அதேவேளையில் கோலியையும் ரோகித் சர்மாவையும் ஒப்பிட முடியாது. கோலியின் சாதனைகள் பிரம்மாண்டமானது. அவருடைய புள்ளி விவரங்களே அதற்கு சான்று. விராட் கோலியும் தோனியின் வழியை பின்பற்ற வேண்டும். தோனி இவர்களை உருவாக்கியது போல இவர்களும் உருவாக்க வேண்டும்” என்றார் அவர்