இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இதனால், தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்ல முடியாமல் இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் பலரும் கடுமையாகப் பாதிப்படைந்துள்ளனர். அனைத்து மாநிலங்களிலும் மாநில அரசுகள் முகாம்களை அமைத்திருந்தாலும் அங்கு இருக்கும் பல்வேறு பிரச்னைகளை சுட்டிக்காட்டி `தங்களை சொந்த ஊர்களுக்கு அனுப்ப அரசு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்’ எனத் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். சில தொழிலாளர்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் இணைந்து நடந்தே கிராமங்களுக்குச் செல்லும் அவலநிலையும் நடந்துள்ளது. இதனால், சில தொழிலாளர்கள் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.

தொழிலாளர்களின் கோரிக்கைகளைக் கருத்தில் கொண்டு மாநில முதல்வர்கள் மத்திய அரசுக்கு `இடம்பெயர்ந்த தொழிலாளர்களை அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டுமென’ வேண்டுகோள் விடுத்துள்ளனர். மத்திய அரசும் பல்வேறு பகுதிகளில் சிக்கித் தவிக்கும் மாணவர்கள், தொழிலாளர்கள், சுற்றுலாப் பயணிகள் ஆகியோர் தங்களது வீடுகளுக்குத் திரும்ப நடவடிக்கைகளை எடுத்து வருவதாகக் கூறியுள்ளது. மேலும், இவர்கள் அனைவரும் தங்கள் ஊர்களுக்குத் திரும்ப சாலை வழியான போக்குவரத்துகள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும் ஊரை அடைந்ததும் வைரஸ் தொற்று தொடர்பான பரிசோதனைகளை மேற்கொண்டு தனிமைப்படுத்துதலில் இருக்க வேண்டும் என்றும் வழிகாட்டுதல்களை அறிவித்துள்ளன. இதனடிப்படையில் சில மாநில அரசுகள் பிற மாநிலங்களில் உள்ள மாணவர்கள் உட்பட சிலரை பேருந்துகள் வழியாக மீட்டு வந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ஊரடங்கு

இந்த நிலையில், குஜராத்தில் சூரத் பகுதியில் சிக்கித்தவிக்கும் தொழிலாளர்களில் ஒருவரான அமீர் சோஹைல் என்பவர், “நான் வீட்டுக்குச் செல்ல விரும்புகிறேன். இங்கே நாங்கள் போராட்டமான வாழ்க்கையை அனுபவித்து வருகிறோம். சரியாக உணவுகூட எனக்குக் கிடைப்பதில்லை. மற்றவர்களைப் போல நானும் எதாவது முயற்சி செய்திருக்க வேண்டும் என நினைத்துக்கொண்டு இருக்கிறேன். ஆனால், நான் இறந்துவிட்டால் என்னுடைய குடும்பத்துக்கு நல்லதாக இருக்காது. நான் என்னுடைய மகனிடம் திரும்பிச் செல்வேன் என நம்புகிறேன். அவனைக் கட்டியணைக்க விரும்புகிறேன். பீகார் மாநிலத்தில் முசாஃபர்பூர் பகுதியிலுள்ள என்னுடைய வீட்டின் முற்றத்தில் நன்றாகத் தூங்க விரும்புகிறேன். இப்போது, அரசாங்கம் என்னை அங்கு அழைத்துச் செல்லும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்” என்று கவலையுடன் கூறியுள்ளார்.

Also Read: `5 வாரங்களுக்குப் பின்..!’ -மத்திய அரசின் அனுமதியால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நிம்மதி #Lockdown

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமான மகாராஷ்டிராவில் தொழிலாளர்கள் போராட்டங்களையும் நடத்தினர். அம்மாநிலத்தில் நாக்பூர் பகுதியில் சிக்கித் தவிக்கும் தொழிலாளி சுமன் என்பவர் மத்தியப் பிரதேசத்தில் உள்ள தனது ஊருக்குச் செல்ல முடிவு செய்துள்ளார். ஆனால், அவரை காவல்துறையினர் தடுத்து முகாமில் தங்க வைத்துள்ளனர். இதுதொடர்பாக அவர் பேசும்போது, “நான் என்னுடைய ஊருக்கு நடந்து செல்லத் தயாராக இருந்தேன். ஆனால், இங்கே உணவு மற்றும் அடிப்படைத் தேவைகளுக்காக காத்திருக்கிறோம். நாங்கள் சம்பாதித்தபோது எங்களுக்கான விதிமுறைகளின்படி வாழ்ந்தோம். இங்கே நாங்கள் பிச்சை எடுக்க வேண்டிய சூழல் உள்ளது. பேருந்துகள் வரும்போது முதலில் நான் செல்ல விரும்புகிறேன். ஏழு மாதங்களாக இங்கு பணியாற்றுகிறேன். இப்போதுபோல எப்போதும் நான் வீட்டுக்குச் செல்ல ஏங்கியதில்லை” என்று தனது ஆதங்கங்களைப் பகிர்ந்துள்ளார்.

ஊரடங்கு

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இவர்களைப் போல நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்லவும் உறவினர்களைப் பார்க்கவும் ஏங்கித் தவித்து வருகின்றனர். மத்திய மற்றும் மாநில அரசுகளும் மெதுவாக இதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வரும் சூழலில் மாநில அரசுகள் ஒன்றுடன் ஒன்று இணைந்து செயலாற்றும் பட்சத்தில்தான் பாதுகாப்பாக விரைவில் தொழிலாளர்கள் அவர்களின் சொந்த ஊர்களுக்குச் செல்ல முடியும் என்றும் பலரும் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Also Read: எல்லையில் தவித்த தொழிலாளர்கள்; அமைச்சரின் ராஜிநாமா எச்சரிக்கை! -விதியை மாற்றிய மத்திய அரசு?

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.