லாக்டௌன் காரணமாக, முறைசாரா பொருளாதாரத்தை நம்பியுள்ள 1. 6 பில்லியன் தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் இருப்பதாக சர்வதேச தொழிலாளர்கள் அமைப்பு கவலை தெரிவித்துள்ளது .
உலகம் முழுவதும் பரவிவரும் கொரோனாவின் தாக்கத்தைத் தொடர்ந்து, உலக நாடுகள் பலவும் 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளன. இந்த தாக்கத்தைத் தொடர்ந்து, வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் போன்றவை முழுவதுமாக மூடப்பட்டு சாலைகள் வெறிச்சோடியுள்ளன. அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் வேலைபார்ப்பவர்கள், வீடுகளில் இருந்து வேலைபார்த்துவருகின்றனர். இதன் காரணமாகப் பொதுமக்களின் பொருளாதார இயல்பு வாழ்க்கை என்பது தலைகீழாக மாறியுள்ளன.
முறைசாரா பொருளாதாரத்தை நம்பியுள்ள தொழிலாளர்கள், கடுமையான வேலை இழப்பைச் சந்திப்பார்கள்.
இந்தப் பொருளாதார சரிவு மற்றும் மாற்றத்தின் காரணமாக, உலக நாடுகள் பலவும் அச்சத்தில் உறைந்துபோயுள்ளன. இதனால் வேலையிழப்பு மற்றும் சம்பளக் குறைப்பு போன்ற நடவடிக்கைகள் ஏற்கெனவே தொடங்கியுள்ள நிலையில், முறைசாரா பொருளாதாரத்தை நம்பியுள்ள தொழிலாளர்கள் கடுமையான வேலை இழப்பைச் சந்திப்பார்கள் என்று சர்வதேச தேசிய தொழிலாளர்கள் அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.
சில்லறை மற்றும் கடின உற்பத்தியை மேற்கொள்ளும் என்டர்பிரைசஸ் நிறுவனங்கள் (hard hit sectors ) 430 மில்லியன் நிறுவனங்களுக்கு நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.
இதில், லாக்டெளன் அறிவிக்கப்பட்ட முதல் மாதத்தில், இந்த நிறுவனங்களுக்கு 60 சதவிகித வருமான இழப்பு ஏற்பட்டதாகவும் கணக்கிட்டுள்ளது. இந்த இழப்பு, ஆப்பிரிக்கா மற்றும் அமெரிக்கா 80 சதவிகிதத்திற்கு மேலாகவும், ஐரோப்பா மத்திய ஆசியாவில் 70 சதவிகிதமாக இருப்பதாகவும் கூறியுள்ளது. இந்த இழப்பின் சதவிகிதம், அந்தந்த நாடுகளுக்கு ஏற்ப மாறுபடுவதாகவும் கூறியுள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சர்வதேச தொழிலாளர் அமைப்பின் இயக்குநர் , (Guy Ryder) கை ரைடர், “இப்படியான பேரிடர் காலத்தில், பாதிக்கப்படும் தொழிலாளர்களைப் பாதுகாக்க வேண்டிய கடமை அரசாங்கத்திற்கு இருக்கிறது. மேலும், அவர்களுடைய வாழ்வாதாரம் மற்றும் சமூக பாதுகாப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் கேள்விக் குறியாகியுள்ள நிலையில், அவசர கால நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.