வால்பாறையில் சமையலறை பாத்திரங்களுக்கிடையே இருந்த நல்ல பாம்பை வனத்துறையினர் பாதுகாப்பாக பிடித்தனர்.
கோவை மாவட்டம் வால்பாறை அருகேயுள்ள மாணிக்கா எஸ்டேட் பகுதியில் வசிப்பவர் சிவா. இவரது வீட்டின் சமையல் அறை பகுதியில் பாம்பு ஒன்று புகுந்துள்ளது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த சிவா குடும்பத்தினர், வால்பாறை வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பேரில் வனத்துறையினர் கருப்பசாமி மற்றும் ஆனந்த் இருவரும் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர்.
அப்போது சமையலறை பாத்திரங்களுக்கு இடையில் பாம்பு சுருண்டு இருந்தது தெரியவந்தது. நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பிறகு பாம்பை வனத்துறையினர் லாவகமாக பிடித்தனர். இதையடுத்து அது விஷத்தன்மை கொண்ட நாகப்பாம்பு (நல்ல பாம்பு) என்பதும், சுமார் 5 அடி நீளம் இருந்தது தெரியவந்தது. பின்னர் அப்பாம்பு அடர்ந்த வனப்பகுதிக்குள் விடப்பட்டது.
இதேபோல் வால்பாறை வாழைத் தோட்ட பகுதி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் நாகப்பாம்பு ஒன்று நீண்ட நாளாக சுற்றி திரிவதாக மக்கள் தெரிவித்துள்ளனர். அதையும் வனத்துறையினர் லாவகமாக பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர்.