கேரள நடிகர் ஒருவர் தனது திருணத்தை மிக எளிமையாக நடத்திக் கொண்டு அதன்மூலம் எஞ்சிய பணத்தைக் கேரள முதல்வரின் நிவாரண நிதிக்கு அளித்துள்ளார்.
2016 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘கம்மதிபாடம்’. இந்தப் படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் மணிகண்டன் ஆர் அச்சாரி. இவருக்கு சில மாதங்கள் முன்பு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அதனையடுத்து அவருக்குத் திருமணத்திற்கான நாள் குறிக்கப்பட்டது. ஆனால் இதனிடையே கொரோனா தொற்றுக் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது.
ஆகவே அனைத்து மக்களும் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் முடங்கினர். அவசரத் தேவைகளுக்கு மட்டுமே மக்கள் வெளியே வர அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட திருமணம் போன்ற நிகழ்வுகளுக்கும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன. இதனிடையே தான் நடிகர் மணிகண்டனின் திருமண நாள் நெருங்கி உள்ளது. அதிகம் கூட்டம் சேர்க்காமல் அவர் எளிமையாகத் தனது திருமணத்தை நடத்த முடிவு செய்தார். அது குறித்து அவர் சமூக வலைத்தளத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்து கொண்டிருந்தார். அதில் ‘நாளை ஞாயிற்றுக்கிழமை எனது திருமணம் நடக்க உள்ளது. நாங்கள் இதை எளிமையாக நடத்த முடிவு செய்துள்ளோம். அதில் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொள்ள உள்ளனர். வீட்டிலிருந்தபடியே மனதளவில் உங்களின் ஆசீர்வாதம் இருக்கும் என நான் நம்புகிறேன்” எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில் இன்று திட்டமிட்டபடி நடிகர் மணிகண்டன் ஆர் அச்சாரியின் திருமணம் நடந்தது. திருமணம் தடபுடலாக நடக்காததால் பணமும் மிச்சமாகியுள்ளது. ஆகவே அவர் தனது திருமண செலவுக்காக வைத்திருந்த பணத்தைக் கேரள முதல்வரின் பேரிடர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார். அதற்கான தொகை திரிபுனிதுராவில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் நடந்து முடிந்த உடனேயே எம்.எல்.ஏ ஆன சுவராஜிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்தச் செய்தியை அறிந்த பலர் அவரைப் பாராட்டி வருகின்றனர்.