கேரள மாநிலம் கோட்டயம், கொல்லம் ஆகிய மாவட்டங்களில் தலா மூவர், கண்ணூரில் ஒருவர் என ஏழு பேருக்கு கொரோனாபாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் இதுவரை 24,942 பேர் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் இந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 28,48,102 ஆக உள்ளது. ஆகவே தொற்று தீவிரமாகாமல் தடுக்க உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை மே 3 ஆம் தேதிவரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று மட்டும் கேரள மாநிலம் கோட்டயம், கொல்லம் ஆகிய மாவட்டங்களில் தலா மூவர், கண்ணூரில் ஒருவர் என ஏழு பேருக்கு கொரோனாபாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த கேரள முதல்வர் பினராயி விஜயன், “கோட்டயம், கொல்லம் மாவட்டங்களில் தலா மூவர், கண்ணூரில் ஒருவர் என ஏழு பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு உள்ளானவர் 457 ஆக உயர்ந்துள்ளது என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “இதில் மூவர் உயிரிழந்துள்ளனர். மாநிலத்தில் இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து 331 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 116 ஆக உள்ளது. மேலும் மாநிலம் முழுக்க 21,044பேர் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர். இவர்களில் 20,580 பேர் வீடுகளிலும் 464 பேர் மருத்துவமனைகளிலும் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர்” என்றார்.
கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளவர்கள் வசித்த பகுதிகள் ‘ஹாட் ஸ்பாட்’என அறிவிக்கப்பட்டுள்ளன. அத்தகைய 84 ஹாட் ஸ்பாட்டுகளில் “ட்ரிப்பிள்” லாக்டவுன் அமல்படுத்தி ஊரடங்கு விதிமுறைகள் மேலும் கடுமையாக்கப்பட்டுள்ளன.