கொரோனாவை தடுக்க நிதி வேண்டுமென்றால் எல்லையில் அத்துமீறும் செயலை நிறுத்திவிட்டு மருத்துவமனை கட்டுங்கள் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கபில் தேவ் தெரிவித்துள்ளார்.
கொரோனா ஒழிப்பு பணிக்காக நிதி திரட்ட இந்தியா – பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட வேண்டும் என்று ஷோயப் அக்தர் உள்ளிட்ட சில முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். அதற்கு ஏற்கெனவே “கிரிக்கெட் போட்டி நடத்திதான் நிதி திரட்ட வேண்டிய நிலையில் இந்தியா இல்லை” என காட்டமாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் இணையதளம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள கபில் தேவ் பல்வேறு விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
அதில் “உணர்ச்சிவசப்பட்டு இந்தியா – பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் நடத்தப்பட வேண்டும் என கூறலாம். ஆனால் இப்போதுள்ள சூழ்நிலையில் கிரிக்கெட் முக்கியமில்லை. உங்களுக்கு நிதி வேண்டுமென்றால் எல்லையில் நடத்தும் அத்துமீறல்களை நிறுத்தங்கள். அந்தப் பணத்தை வைத்து மருத்துவமனை, பள்ளிகளை கட்டுங்கள். எங்களுக்கு நிதி தேவை என்றால் இங்கு ஏராளமான ஆன்மிக அமைப்புகள் இருக்கின்றன, அவர்கள் அரசுக்கு உதவுவார்கள்” என தெரிவித்துள்ளார் கபில் தேவ்.
இது குறித்து மேலும் தொடர்ந்த கபில் தேவ் “கொரோனா பாதிப்பை நான் வேறு மாதிரியாக பார்க்கிறேன். இப்போது கிரிக்கெட் போட்டிகள் நடைபெறாததுதான் பிரச்னையா என தெரியவில்லை. நான் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளை பற்றி கவலைப்படுகிறேன். பள்ளிகள், கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் இவர்கள் கல்வி என்னவாகும் என்று யோசித்துக்கொண்டு இருக்கிறேன். முதலில் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும். பின்பு, கிரிக்கெட்டோ கால்பந்தோ ஆகியவை தன்னாலே நடைபெறும்” என தெரிவித்துள்ளார்.