மதுரையில் சிறப்புச் சார்பு ஆய்வாளர் மற்றும் தலைமைக் காவலர் உள்ளிட்ட 4 பேருக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
மதுரையில் இன்று மதுரை மாநகர் தெற்கு வாசல் காவல் நிலைய சட்டம் ஒழுங்கு சிறப்புச் சார்பு ஆய்வாளர் மற்றும் மதுரை மாநகர் தெற்கு போக்குவரத்து காவல் நிலையத்தில், போக்குவரத்து தலைமைக் காவலர் உள்ளிட்ட நான்கு பேருக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மதுரையில் ஏற்கனவே கொரோனா தொற்றால் 56 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று மேலும் நான்கு பேருக்கு கொரானா உறுதி செய்யப்பட்டதால் மதுரை மாவட்டத்தில் மட்டும் கொரானாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது.
இதில், மதுரை அரசு ராஜாஜி கொரானா சிறப்பு மருத்துவமனையில் பணியாற்றிய ஒரு பெண் செவிலியர் , மருத்துவமனையின் ஒப்பந்த பணியாளர்கள் 3 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவது குறிப்பிடத்தக்கது. இதில் மதுரை அண்ணா நகரைச் சேர்ந்த 54 வயது நபர் கடந்த மார்ச் 25ஆம் தேதி உயிரிழந்தார். மேலும் மதுரை மேலமாசி வீதி பகுதியைச் சேர்ந்த 72 வயது மூதாட்டி நேற்று உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரை அரசு ராஜாஜி கொரானா சிறப்பு மருத்துவமனையில் கொரானா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற 28 பேர் குணமடைந்து வீடுகளுக்குச் சென்ற நிலையில் 30 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.