பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியின் முதல் இன்னிங்ஸில் அவுட்டானதும் கழிவறைக்கு சென்று அழுதுக்கொண்டிருந்தேன் என்று இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் நேற்று தனது 47 ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு உலகெங்கிலும் உள்ள விளையாட்டு வீரர்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர். இந்நிலையில், இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசர் ஹூசைனுடன் ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் கலந்துறையாடிய சச்சின் பல்வேறு தகவல்களையும், தன்னுடைய முதல் டெஸ்ட் போட்டி அனுபவங்களையும் பகிர்ந்துக்கொண்டார்.
அப்போது பேசிய அவர் “1989 இல் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வாசிம் அக்ரமும், வக்கார் யூனிஸும் தாறுமாறாக பந்துவீசினர். முதல் இன்னிங்ஸில் 15 ரன்களில் ஆட்டமிழந்தேன். ஒரு பள்ளி மாணவனைப் போலதான் அன்றையப் போட்டியில் விளையாடி ஆட்டமிழந்தேன். சில பந்துகளை என் உடம்பிலும் பட்டது. ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பிய பின்பு என்னை நானே நொந்துக்கொண்டேன். கழிவறைக்கு சென்று அழுதுக்கொண்டிருந்தேன்” என்றார் சச்சின்.
இது குறித்து மேலும் தொடர்ந்த அவர் “நான் விளையாடிய விதம். இதுதான் நான் இந்தியாவுக்காக விளையாடும் கடைசிப் போட்டி என நினைக்கும் அளவுக்கு சென்றது. மனமுடைந்துப் போனேன். அப்போதுதான் ரவி சாஸ்திரி என்னிடம் வந்து கவலைப்படாதே அவர்கள் சிறப்பாக பந்துவீசினார்கள், இதுதான் உன் கடைசிப் போட்டி என நினைக்காதே, பிட்சில் நேரத்தை செலவிடு, அப்போதுதான் அவர்களின் பந்துவீச்சை உன்னால் புரிந்துக்கொள்ள முடியும் என்றார். இதனையடுத்து ரவிசாஸ்திரியின் அறிவுறையின்படி அடுத்தப் போட்டியில் விளையாடி 59 ரன்களை அடித்தேன்” என்று நெகிழ்ச்சியுடன் கூறினார் சச்சின் டெண்டுல்கர்.