இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் 47வது பிறந்தநாளை முன்னிட்டு பிரபல வேகப்பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த் Heloவில் சிறப்பு நேரலை செய்தார். இந்த நேரலையில் சச்சின் டெண்டுல்கரின் ரசிகரான நிதின் ஸ்ரீசாந்துடன் இணைந்து கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர் நமக்காக பகிர்ந்த சிறப்பு தகவல்கள்.
சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட்டுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த விளையாட்டு உலகத்திற்கே கடவுள். அவரின் பிறந்தநாளை விளையாட்டு தினமாக கொண்டாட வேண்டும் என்றார். மேலும், தனது வீட்டின் ஒரு அறை முழுக்க சச்சினின் புகைப்படங்களை வைத்திருப்பதாகவும், சச்சின் டெண்டுல்கர் பயன்படுத்திய பேட்டை தனது வீட்டு பூஜையறையில் வைத்திருப்பதாகவும் தெரிவித்தார்.
சச்சின் அவரின் 100வது சதத்தை பூர்த்தி செய்தபோது சச்சினை கட்டிப்பிடித்தது தன் வாழ்வின் நெகிழ்ச்சியான தருணம் எனவும், சச்சின் விளையாடிய சமயத்தில் தானும் விளையாடியது மிகப்பெரிய அதிர்ஷ்டம் எனவும் ஸ்ரீசாந்த் கூறினார்.
சச்சின் சில சமயங்களில் தனது குடும்பத்தினரை கிரிக்கெட் மைதானங்களுக்கு அழைத்து வந்துள்ளார், அவர்களுடன் பழகியது மிகவும் அற்புதமானது, சச்சின் ஒரு மாமனிதர், கிரிக்கெட்டுக்காகவே பிறந்தவர் அவர் எனக்கூறி நெகிழ்ச்சியடைந்தார்.
சச்சின் மற்ற வீரர்களுக்கு உதவும் குணம் கொண்டவர். குறிப்பாக இளம் வீரர்களுக்கு உத்வேகமளிப்பவர், ரோஹித் ஷர்மா இரட்டை சதமடித்ததில் சச்சினுக்கு பெரும்பங்கு உண்டு எனவும் நம்முடன் பகிர்ந்தார்.
பெரும்பாலான நேரங்களில் போட்டி முடிந்த பிறகு ஓய்வறையில் சச்சின் சக வீரரான சேவாக்குடன் போட்டி பற்றி விவாதித்தாகவும் அந்தச் சமயங்களில் அவர் தனக்கு பல அறிவுரைகளை வழங்கியுள்ளதாகவும் ஸ்ரீசாந்த் குறிப்பிட்டார். அதில் குறிப்பாக “எதற்காகவும் மாறாதே நீ, நீயாகவே இரு. குடும்பமும் தேசமும் எல்லாவற்றையும் விட முக்கியமானது” என்ற மிக முக்கியமான அறிவுரையை அவர் தனக்கு வழங்கியதாகவும் கூறினார். சச்சின் தன்னை Shantu என்ற அழைப்பதை விரும்புவார் எனத் தெரிவித்த ஸ்ரீசாந்த் அனைத்து சச்சின் ரசிகர்களுக்கும் தனது வாழ்த்தினை தெரிவித்தார்.
இறுதியாக, தன் கேரள அணிக்காக ரஞ்சிக்கோப்பை வெல்வதே தனது கனவு என்று கூறி முடித்துகொண்டார்.