என்ன நடந்தாலும் சரி இறுதி வரை ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில்தான் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதில் தீர்மானமாக இருந்ததாக கொரோனாவில் இருந்து மீண்ட 42 வயது அரசு மருத்துவர் உருக்கமாக பேட்டியளித்துள்ளார்.
கொரோனாவில் இருந்து குணமடைந்த பின்பு இன்று பேட்டியளித்த அவர் ” நான் ஒரு அரசு மருத்துவர் ஏப்ரல் 9 ஆம் தேதி மிகவும் முடியாத நிலையில் அதாவது மூச்சுத் திணறல் ஏற்பட்டு ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டேன். மிகவும் மோசமான நிலையிலேதான் இங்கு வந்தேன். நான் பிழைப்பேன் என்று என் குடும்பத்தினருக்கே முதலில் சந்தேகம் இருந்தது. ஆனால் எனக்கு இங்கு விலை உயர்ந்த சிகிச்சைகள் அனைத்தும் கொடுக்கப்பட்டது” என்றார்.
மேலும் தொடர்ந்த 42 வயதான மருத்துவர் ” ஆனால் நான் இங்கு வந்த இரண்டாவது நாளே மயக்க நிலைக்கு சென்றேன். இதனால் என் நண்பர்கள் உள்பட அனைவரும் என்னை தனியார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சைப் பெற்றுக்கொள்ளுமாறு கூறினர். ஆனால் நான் இங்கேயே படித்தவன் என்பதால் அரசு மருத்துவமனையின் சிகிச்சை எப்படி என்பது எனக்கு தெரியும். அதனால் எனக்கு என்ன நேர்ந்தாலும் நான் இங்கேயே சிகிச்சை எடுத்துக்கொள்ள முடிவெடுத்தேன்” என்றார்
இறுதியாக நெகிழ்ச்சியுடன் பேசிய அவர் “எனக்கு சிறப்பான சிகிச்சை கொடுக்கப்பட்டது, மீண்டும் நான் பிழைத்து வந்ததற்கு அரசுக்கும், மருத்துவர்களுக்கும், மருத்துவ பணியாளர்களும்தான் காரணம். 14 நாள்களுக்கு முன்னாடி, இப்படி பேசுவேன் என நினைக்கவில்லை அதனை சாதகமாக்கியுள்ளனர் அதற்கு என் நன்றிகள்” என உணர்ச்சிவசப்பட்டார் கொரோனாவை வென்ற மருத்தவர்.