கன்னியாகுமரியில் காவலரை கத்தியால் குத்திவிட்டு தப்பிக்க முயன்ற கஞ்சா வியாபாரியை போலீஸார் சுற்றிவளைத்தனர்.
குமரி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை அதிகமாக இருப்பதாக புகார்கள் வந்தன. குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விநியோகம் செய்யப்படுவதாக வந்த புகாரையடுத்து, மாவட்ட எஸ்பி ஸ்ரீநாத் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார். இதனால் கஞ்சா விற்பனை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் 144 தடை உத்தரவு அமல் படுத்தப்பட்டு டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் மதுப்பிரியர்கள் கஞ்சா பக்கம் திசை திரும்பி உள்ளனர். அவர்களை குறிவைத்து குமரி மாவட்டத்தில் பல கஞ்சா வியாபாரிகள் மறைமுகமாக செயல்பட துவங்கியுள்ளனர். இவர்களை போலீசார் ரகசியமாக கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில், குமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த ஆசாரிப்பள்ளம் பகுதியில் கஞ்சா வியாபாரம் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் தனிப்படை போலீசார் ஆசாரிப்பள்ளம் பகுதியில் ரோந்து சென்றபோது, பைக்கில் வந்த கஞ்சா வியாபாரி அஜித் (30) மற்றும் அவரது கூட்டாளிகள் 2 பேரை சுற்றிவளைத்தனர். இதில் ஆத்திரமடைந்த அஜித் தன்னை பிடிக்க முயன்ற தனிப்படை காவலர்கள் வீரமணி மற்றும் சிவாஜியை சரமாரியாக கத்தியால் தாக்கியுள்ளார்.
அமெரிக்காவில் கிளம்பிய பன்றிகாய்ச்சலுக்கு இழப்பீடு கேட்டோமா..? : சீனா பதிலடி
இதில் காவலர் வீரமணி என்பவருக்கு தோள்பட்டையில் கத்திக்குத்து விழுந்தது. பின்னர் காவலர் சிவாஜியின் கையை கடித்தவிட்டு அஜித் தப்பிக்க முயன்றுள்ளார். அப்போது தனிப்படை போலீசார் அவரை மடக்கி பிடித்தனர். இதனைத்தொடர்ந்து காயமடைந்த வீரமணி மற்றும் சிவாஜி ஆகியரை தனிப்படை போலீசார் ஆசாரிபள்ளம் பகுதியில் உள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். கைது செய்யப்பட்ட கஞ்சா வியாபாரி அஜித்திடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இவர் ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு போலீசாரை கத்தியால் குத்தி, தப்பிக்க முயன்றவர் என்பது குறிப்பிடதக்கது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM