கோவையில் 40 வயது பெண் காவலருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சுகாதாரத்துறை சார்பில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்த தகவல்கள் நாள்தோறும் வெளியிடப்பட்டு வருகிறது. இன்று வெளியிடப்பட்ட தகவலின்படி தமிழகத்தில் புதிதாக 76 பேருக்கு கொரோனா உள்ளது உறுதி செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் சென்னையில் மட்டும் புதிதாக 55 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. அத்துடன் இன்று மட்டும் தென்காசியில் 5 பேருக்கும், செங்கல்பட்டு மற்றும் தஞ்சாவூரில் தலா 3 பேருக்கும் கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது.

இந்நிலையில், கோவையில் 40 வயது பெண் காவலர் ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளது உறுதியாகியுள்ளது. கோவை அன்னூர் காவலர் குடியிருப்பில் வசித்து வரும் இவர், அன்னூர்-அவினாசி சாலையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். சீல் வைக்கப்பட்ட பகுதியில் கண்காணிப்பு பணி மேற்கொண்ட போது, தொற்று ஏற்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேட்டுப்பாளையம், அன்னூர், மதுக்கரை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, ஆனைமலை, துடியலூர் ஆகிய சில் வைக்கப்பட்ட பகுதிகளில் பணிபுரியும் காவலர்கள் மொத்தம் 344 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM