சர்வதேச அளவில் பெட்ரோல், டீசல் விற்பனை கடும் சரிவை சந்தித்துள்ளன.
கொரோனா வைரஸ் எனும் ஒற்றை நுண்ணுயிரி உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. சர்வதேச அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள இந்த வைரஸ், உலகப் பொருளாதாரத்தையே உருட்டிப்போட்டுள்ளது. இதில் பல்வேறு நாடுகள் பலத்த அடியை கொரோனாவிடம் இருந்து பெற்றுள்ளன. உலகின் வல்லரசு நாடாக கருதப்படும் அமெரிக்கா அடங்கிப்போய் கிடக்கிறது. இவ்வாறாக அனைத்து துறைகளையும் பாதித்துள்ள கொரோனா வைரஸால் பல நாடுகளில் பெட்ரோல், டீசல் விற்பனையும் முடங்கியிருக்கிறது. இந்தியாவிலும் இதே நிலை தான்.
இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு மே 3ஆம் தேதி வரை அமலில் இருக்கும் நிலையிலும், பெட்ரோல் பங்குகள் நேரக் கட்டுப்பாடுகளுடன் செயல்படுகின்றன. ஆனாலும் பெட்ரோல் நிரப்புவதற்கு மக்கள் வருவதில்லை. காரணம் மக்கள்தான் ஊரடங்கில் முடங்கிக் கிடக்கிறார்களே..! பின்னர் எங்கே வாகனங்களில் செல்வது. இருந்தாலும் அத்தியாவசியத் பொருட்களை ஏற்றி வரும் வாகனங்கள் பங்குகளில் பெட்ரோல், டீசல் உள்ளிட்டவற்றை நிரப்பிக்கொள்கின்றன.
இதனால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விற்பனை பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. மக்கள் அன்றாடம் உணவு சமைக்க பயன்படுத்தும் கேஸ் சிலிண்டர்களின் விற்பனை மட்டுமே 20%க்கும் மேல் உயர்ந்துள்ளது. மற்றபடி பெட்ரோல், டீசல், விமான எரிபொருள் ஆகியவற்றின் விற்பனை வீழ்ச்சியடைந்துள்ளன. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட பின்னர் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை 60 சதவிகிதத்திற்கும் மேல் வீழ்ச்சியடைந்துள்ளது. விமான எரிபொருள் முழுவதும் விற்பனையின்றி கிடக்கிறது. இதனால் வரலாறு காணாத வகையில் இந்தியாவில் எரிபொருள் விற்பனை தேக்கம் ஏற்பட்டிருக்கிறது.
முன்னதாக, கடந்த மாதத்தில் கச்சா எண்ணெய்யின் விலை 21 ஆண்டுகள் காணாத சரிவை சந்தித்தது. இதனால் பெட்ரோலின் விலை பெரும் வீழ்ச்சியடையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை பெரிதும் குறையவில்லை. ரூ.70க்கும் மேலே தான் விற்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. மார்ச் 16ஆம் தேதி முதல் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.72.28 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.65.71 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலையில் எந்தவித மாற்றமும் இன்று வரை ஏற்படவில்லை.
கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சி, விற்பனை வரலாறு காணாத சரிவு ஏற்பட்டுள்ளது. ஆனால் பெட்ரோல் விலையில் மாற்றம் இல்லை என்பது நுகர்வோரை சமூக வலைத்தளங்களில் கேள்வி கேட்க வைத்துள்ளது. பெட்ரோல் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே தீர்மானிப்பதால் விலையில் மாற்றம் செய்யப்படுவதில்லை என குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன. 15 நாட்களுக்கு ஒரு முறை மாற்றம் செய்யப்பட்ட பெட்ரோல், டீசல் விலை பின்னர் தினந்தோறும் மாற்றம் செய்யப்படும் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது.
தற்போது இந்திய பொருளாதாரமே தற்போது முடங்கியிருக்கிறது. நிறுவனங்கள், பொழுதுபோக்கு மையங்கள், சுற்றுலா என அனைத்தும் முடங்கியிருப்பதால் மத்திய, மாநில அரசுகள் வரி வருவாயில் பெரும் இழப்பை சந்தித்துள்ளன. இந்த சமயத்தில் கொரோனா வைரஸ் தடுப்புக்காக மத்திய அரசுக்கு கூடுதல் நிதி தேவைப்படுகிறது. மாநில அரசுகளும் தங்களுக்கு நிதியை ஒதுக்க வேண்டும் என அழுத்தம் கொடுத்து வருகின்றன. இதனால் பெட்ரோல், டீசல் விலையை குறைத்து, அதன்மூலம் கிடைக்கும் வருவாய் குறைந்தால் மேலும் நிதி நெருக்கடி ஏற்படும் என அரசு கருதுவதாக தெரிகிறது. நிதி பற்றாக்குறை காரணமாகவே சுங்கச்சாவடிகளும் இன்று முதல் கட்டணம் வசூல் செய்யத் தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பாக பெட்ரோல், டீசல் உரிமையாளர் சங்கத்தை சேர்ந்த முரளி என்பவரிடம் பேசினோம். அவர் கூறும்போது, ‘பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்கள்தான் முடிவு செய்கின்றன. தற்போது தமிழகம் உட்பட அகில இந்திய அளவில் 70% பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விற்பனை குறைந்துள்ளது. இதனால் இந்திய அரசுக்கு பெரும் வரி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்திலும் பெட்ரோலை வாங்கும்போது தமிழக அரசுக்கு வரி செலுத்திய பின்னரே விற்பனை செய்யப்படுகிறது. எனவே தமிழக அரசுக்கும் இதில் வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. அதேசமயம் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் 30% மட்டுமே விற்பனை நடப்பதால், பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர். நிர்வாகத்தை நடத்துவதற்கு கையில் இருக்கும் பணத்தையும் செலவிடும் நிலை ஏற்படுகிறது” என்றார்.
அத்துடன், “பெட்ரோலை எண்ணெய் நிறுவனங்கள் இறக்குமதி செய்தால் தான் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்றவாறு விலை நிர்ணயம் செய்யப்படும். இந்தியாவில் தற்போது விற்பனை முற்றிலும் முடங்கியுள்ளதால், ஏற்கெனவே இறக்குமதி செய்யப்பட்ட கச்சா எண்ணெய் கொண்டே இன்னும் பெட்ரோல், டீசல் தயாரிக்கப்படலாம். எனவே அதன் அடிப்படையில் இறக்குமதி செய்யப்பட்டபோது இருந்த விலை தொடர்ந்து மாறாமல் இருக்கலாம்” என்று தனது அனுபவத்தின் அடிப்படையில் யூகித்தார்.