தமிழகத்தில் ஊரடங்கு தளர்வு இருக்கிறதா? என்பது தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி இன்று அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளில் ஏப்ரல் 20-ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கு தளர்த்தப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. அதன்படி, தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு குறைவான மற்றும் பாதிப்பு இல்லாத பகுதிகளில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரையிலும் தற்போதைய ஊரடங்கு நிலை தொடரும் என நேற்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.
இதற்கிடையே கொரோனா பரவும் நிலையை பொருத்து எந்தெந்த புதிய தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் இதர சேவைகள் இயங்கலாம் என்பது பற்றி முடிவெடுக்க மூத்த அமைச்சர்கள் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட 12 குழுவை தமிழக அரசு நியமித்தது.
இந்தக் குழுவிடம் முதலமைச்சர் பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார். குழுவின் ஆலோசனைகளை ஆராய்ந்து முதலமைச்சர் முடிவெடுப்பார் எனவும், இதைத்தொடர்ந்து இன்று ஊரடங்கு தளர்வு தொடர்பான அறிவிப்புகளை அவர் வெளியிடுவார் எனவும் தெரிகிறது.