பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!
கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் போராடி வருகின்றன. கொரோனாவுக்கு தடுப்பூசியை உருவாக்க உலகின் முன்னணி நிறுவனங்கள் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளன. இந்நேரத்தில், இந்தியாவில் நடக்கின்ற முயற்சிகளில் சிலவற்றைப் பார்க்கலாம். கொரோனா பரவலைத் தடுப்பதில் மாஸ்க்குகள் முக்கியமானவை. CSIR-Central Salt and Marine Chemicals Research Institute ஒரு மாஸ்க் தயாரித்திருக்கிறார்கள். பொதுவாக மாஸ்க்குகள் நீர்த்திவலைகள் பரவுவதைத் தடுக்கும். இவர்கள் தயாரித்துள்ள மாஸ்க் கொரோனா வைரஸ்களைவிட சிறிய வைரஸ்களைக்கூட தடுக்கக் கூடியது. இதை உருவாக்கியிருக்கும் முனைவர் வி கே ஷஹி, இந்த மாஸ்க்குகள் N95 மாஸ்க்குகளைவிட சிறந்தவை என்று குறிப்பிட்டுள்ளார். இது ஒரு பயனுள்ள கண்டுபிடிப்பு.

கொரோனா தொற்றைக் கண்டறிவது எளிதானதாக இல்லை. பரிசோதனை முடிவுகள் கிடைக்க ஆறு நாள்கள் கூட ஆகிறது. பரிசோதனை செய்யக்கூடிய test kit இறக்குமதி செய்ய வேண்டி உள்ளது. சீனாவிலிருந்து 6.5 லட்சம் test kit வந்ததாக செய்தி படித்தேன். இந்த நேரத்தில், CSIR-Institute of Genimics and Integrative Biology நிறுவனத்தைச் சேர்ந்த முனைவர்கள் சவிக் மைத்தி மற்றும் தேப்ஜோதி சக்ரபர்த்தி ஆகியோர் ஒரு பரிசோதனை முறையை உருவாக்கி இருக்கின்றனர். காகிதத்தை அடிப்படையாக கொண்ட இந்தப் பரிசோதனை முறையில், முடிவுகள் சில மணி நேரங்களில் கிடைக்கும். செலவு 500 ரூபாய் ஆகும் என்று குறிப்பிட்டுள்ளார்கள். இது பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க பெருமளவு உதவும்.
இன்னொரு பிரச்னையாக இருப்பது, கொரோனா பாதித்தவர்களுக்கு ஆக்சிஜன் கொடுப்பது. இதற்கு வென்டிலேட்டர்கள் பயன்படுத்தப்படுகிறது. இவை எல்லா மருத்துவமனைகளிலும் தேவைக்கு இருப்பதில்லை. இவற்றை இயக்குவதற்கும் நிபுணத்துவம் வேண்டும். ஆனால், எல்லா நோயாளிகளுக்கும் வென்டிலேட்டர் தேவையில்லை என்ற ஒரு கருத்தும் இருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் CSIR-National Chemical Laboratory இல் உருவாக்கப்பட்ட Oxygen Concentrator பயனுள்ளதாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார் முனைவர் உல்லாஸ் கருள்.

இந்திய membrane ஆராய்ச்சியாளர்களில் இவர் மிக முக்கியமானவர். இவருடைய இன்னொரு கண்டுபிடிப்பான தண்ணீர் சுத்திகரிக்கும் உபகரணம் பயன்பாட்டில் உள்ளது. இந்த உபகரணம் பொருத்தப்பட்ட வாகனங்கள் கிராமங்களில் கிடைக்கும் நீரை சுத்தம் செய்து அங்கேயே வழங்கக்கூடியது. இது மற்ற நீர் வழங்கும் முறையில் இருந்து மாறுபட்டது. பொதுவாக, இந்தியாவில் சுத்திகரிக்கப்பட்ட நீரை வாகனங்களில் கொண்டு வந்து விநியோகிப்பார்கள். ஆனால், முனைவர் உல்லாஸ் கருளின் அணுகுமுறை வேறு. இந்த முறை நல்ல பயனைத் தருவதுபோல, Oxygen Concentrator பயன் தரும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் முனைவர் கருள். இவையெல்லாம், கரோனாவுக்கு எதிரான நமது போராட்டத்தில் பயன் தரும் என நினைக்கிறேன்.
பின் குறிப்பு 1: ஓர் ஆராய்ச்சியை ஆய்வகத்திலிருந்து மார்க்கெட்டுக்கு எடுத்துச் செல்வது மிகக் கடினமானது. The valley between lab to market is deep and wide என்று சொல்வார்கள். இது மேற்சொன்ன கண்டுபிடிப்புகளுக்கும் பொருந்தும். முனைவர் கருள் போன்றவர்கள், ஏற்கெனவே வெற்றி பெற்றவர்கள் என்பதால் நம்பிக்கையோடு இருக்கலாம்.

பின் குறிப்பு 2: ஷாஜகான் மும்தாஜை புதைக்க தாஜ்மகாலை கட்டியதுபோல, இயந்திரங்களைப் புதைக்க தேசிய ஆய்வகங்களை உருவாக்குகிறது இந்தியா என்று சொன்னார் சர் சி வி ராமன். பண்டித நேரு, இந்த விமர்சனத்தைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் சி எஸ் ஐ ஆரை ஆரம்பித்தார். அதற்கு உறுதுணையாக இருந்தவர்கள் ஷாந்தி ஷ்வருப் பட்நாகர் மற்றும் ஆற்காடு ராமசாமி முதலியார்.
பின் குறிப்பு 3: ஆற்காடு ராமசாமி முதலியாரின் சகோதரர் ஆற்காடு லட்சுமணசாமி முதலியார். இவர் சென்னை பல்கலைகழகத்தின் புகழ்மிக்க துணைவேந்தர். இவர் துணைவேந்தராக இருந்த பொழுதுதான் நோபல் பரிசு பெற அனைத்துத் தகுதிகளும் உள்ளவராக கருதப்பட்ட பேராசிரியர் ராமச்சந்திரன் சென்னை பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்தார்.
–முனைவர். கோதண்டம் கிருஷ்ணமூர்த்தி
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.