முகக்கவசம் அணிவது தொடர்பாக பிசிசிஐ ஒரு விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்தபோது அனைவரும் முகக்கவசம் அணியத் தேவையில்லை என்றனர். ஆனால் இப்போது வெளியே வரும் அனைவரும் மாஸ்க் அணிவது கட்டாயம் எனக் கூறப்பட்டுள்ளது. ஏனெனில் காற்று மூலமாகவும் கொரோனா தொற்று பரவலாம் என சமீபத்திய ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது. இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன் திரைத்துறையினர் சபதத்தை அறிவித்தனர். அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்து சமூக வலைத்தளத்தில் அவர்கள் விழிப்புணர்வு நடவடிக்கைகளில் இறங்கினர்.

இந்நிலையில், முகக்கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி, பிசிசிஐ அதன் ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி, விராட் கோலி ஆகியோர் முகக்கவசம் அணிவது குறித்த சில தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளனர். இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கு ‘டீம் மாஸ்க் ஃபோர்ஸ்’ (#TeamMaskForce) எனத் தலைப்பிட்டு ஹேஷ்டேக்-ஐ பயன்படுத்தியுள்ளனர்.

மேலும் இந்த வீடியோவில், “இந்தியா அணியின் ஒரு அங்கமாக இருப்பது பெருமைக்குரிய விஷயம். ஆனால் இன்று நாங்கள் ஒரு பெரிய அணியை உருவாக்கப் போகிறோம். என்ன புரியவில்லையா? டீம் மாஸ்க் ஃபோர்ஸ் ”என்று இந்திய அணியின் கேப்டன் கோலி தெரிவித்துள்ளார்.
அவரைத் தொடர்ந்து சச்சின், “வருக இந்தியா.. நீங்களே முகமூடிகளை உருவாக்குங்கள். முகமூடி சக்தியின் ஒரு பகுதியாக இருங்கள். 20 விநாடிகள் கைகளை நன்றாகக் கழுவவும், சமூக இடைவெளியைப் பராமரிப்பதை நினைவில் வையுங்கள் ” எனக் கூறியுள்ளார். ரோஹித் பேசுகையில் “மாஸ்க் படையின் ஒரு பகுதியாக மாறுவது மிகவும் எளிதானது. வீட்டில் உட்கார்ந்து முகமூடிகளை உருவாக்குங்கள். நான் எனக்காக ஒன்றை உருவாக்கியது போல” எனக் கூறியுள்ளார்.

மேற்கொண்டு இந்த வீடியோவில் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, ஸ்மிருதி மந்தனா, ரோஹித் சர்மா, ஹர்பஜன் சிங், ஹர்மன்பிரீத் கவுர், வீரேந்தர் சேவாக், ராகுல் டிராவிட் மற்றும் மிதாலி ராஜ் ஆகியோரும் தாங்கள் தயாரித்து முகக்கவசத்தை பயன்படுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளனர். முன்னதாக, பி.சி.சி.ஐ பிரதமரின் நிவாரணத்திற்கு ரூ .51 கோடி வழங்கி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
#TeamIndia is now #TeamMaskForce!
Join #IndiaFightsCorona and download @mygovindia‘s @SetuAarogya mobile application ?@PMOIndia @narendramodi ?? pic.twitter.com/M06okJhegt
— BCCI (@BCCI) April 18, 2020
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM