2021-2022 ஆம் ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.4 சதவீதமாக இருக்கும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் தெரிவித்துள்ளார்.
ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் மும்பையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், “கொரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளை ரிசர்வ் வங்கி மிக தீவிரமாக கவனித்து வருகிறது. கொரோனாவுக்கு எதிரான போருக்கு ரிசர்வ் வங்கி தயாராக உள்ளது. பொருளாதார இழப்புகள் தொடர்பாக பல்வேறு துறைகளின் கருத்துகளை கேட்டறிந்துள்ளோம். வங்கிகள் வழக்கம் போல் இயங்குவதை ரிசர்வ் வங்கி உறுதி செய்துள்ளது. இக்கட்டான சூழலிலும் வங்கிகள் இயங்கி வருகின்றன. கொரோனா வைரஸ் காரணமாக தற்போது ஏற்பட்டிருப்பது மிகப்பெரிய பொருளாதார சவால். கொரோனாவால் ஏற்றுமதி மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் பொருளாதார நிலையற்ற தன்மை நிலவி வருகிறது. தற்போதைய பாதிப்பு, பொருளாதாரத்துக்கு சவாலாக உள்ளது.” எனத் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், “இந்த ஆண்டு நெல் பயிரிடும் அளவு 37 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்தியாவில் அரிசி, கோதுமை இருப்பு உள்ளதால் தட்டுப்பாடு ஏற்படாது. மார்ச் மாதம் வாகன உற்பத்தி பெருமளவு குறைந்தூள்ளது. 2021-22 நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.4%ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.” எனத் தெரிவித்தார்.