13-ஆவது ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் இப்போதைக்கு நடத்தப்படாது என்று பிசிசிஐ திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்ததையடுத்து மார்ச் 29-ஆம் தேதி நடைபெறவிருந்த ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் போட்டிகள் ஏப்ரல் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. பின்பு, இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட காரணத்தால் திட்டமிட்டப்படி ஐபிஎல் போட்டிகள் நடைபெறவில்லை. மேலும் ஐபிஎல் போட்டிகள் செப்டம்பரில் நடத்தப்படலாம், வெளிநாடுகளில் நடக்கலாம் என்ற செய்திகள் வெளியாகின. இதனையடுத்து ஐபிஎல் போட்டிகளிந் நிலை குறித்து பிசிசிஐ முக்கியமான அறிவிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
இது குறித்து செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ள பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா “நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாலும், ஊரடங்கு உத்தரவு அரசால் செயல்படுத்தப்பட்டு வருவதாலும், அடுத்த அறிவிப்பு வரும் வரை 2020 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்படுகின்றன. கிரிக்கெட் போட்டியை விட தேசத்தின் பாதுகாப்பும் நலனே முக்கியம் என்பதால் பிசிசிஐ மற்றும் ஐபிஎல் அணிகளின் நிர்வாகத்தினர் இத்தகைய முடிவை எடுத்துள்ளோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த அறிக்கையில் “கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த நிலவரத்தை பிசிசிஐ தொடர்ந்து கண்காணித்து ஆராய்ந்தும் வருகிறது. மத்திய அரசின் வழிக்காட்டுதல்களை தொடர்ந்து பின்பற்றி வருகிறோம். இது இனியும் தொடரும்” என கூறப்பட்டுள்ளது.