சீனாவில் ஒரு பெண்ணின் நுரையீரலில் சிக்கிக்கொண்டிருந்த கோழி எலும்பினை 14 ஆண்டுகளுக்கு பின்பு மருத்துவர்கள் அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

சீனாவில் 22 வயதான இளம் பெண் ஒருவர் பல ஆண்டுகளாக தொடர்ச்சியான இருமலால் அவதிப்பட்டு வந்தார். அந்தப் பெண் 8 வயது இருக்கும்போது கோழியின் சிறு எலும்பு பகுதியை முழுங்கியதாக தெரிகிறது. ஆனால் அதனை அலட்சியமாக அப்படியே விட்டுவிட்டனர். ஆனால் பல ஆண்டுகளாக அவருக்கு இருமல் மட்டும் நிற்கவே இல்லை. இது தொடர்பான சிகிச்சைக்கு பல்வேறு மருத்துவமனையை அந்தப் பெண்ணின் பெற்றோர்கள் அணுகியுள்ளனர்.

image

இறுதியாக அந்தப் பெண்ணுக்கு மூச்சுக்குழாய் அழற்ச்சி (bronchiectasis) இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். மேலும், அந்தப் பெண்ணுக்கு அதற்கான சிகிச்சையும் அளித்தனர். இதனையடுத்து அந்தப் பெண் மூச்சுக்குழாய் அழற்ச்சிக்கான மாத்திரை மருந்துகளை தொடர்ந்து உட்கொண்டு வந்தார். ஆனாலும் அவருக்கு எந்தப் பலனும் கிடைக்கவில்லை. அவரின் இருமல் நோய் தொடர்ந்துக்கொண்டே இருந்தது. இதனால் அந்த இளம் பெண் வாடிப்போனார்.

image

இதனையடுத்து அண்மையில் குயாங்சூவில் உள்ள சீன மருத்துவ பல்கலைக்கழகத்துக்கு அவர் சென்றுள்ளார். அந்தப் பெண்ணை பரிசோதித்த மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் அவருக்கு முதல் கட்டமாக சிடி ஸ்கேன் எடுத்தனர். அதில் அவருடைய நுரையீரலில் ஏதோ ஒரு பொருள் இருப்பதை அறிந்துக் கொண்டனர். இதனையடுத்து அந்தப் பெண்ணின் நுரையீரலில் சிக்கிக்கொண்டு இருக்கும் பொருளை அறுவைச் சிகிச்சை மூலம் அகற்ற முடிவு செய்தனர். இதனையடுத்து அந்தப் பெண்ணுக்கு 30 நிமிடம் அறுவைச் சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்கள் நுரையீரலில் சிக்கியிருந்த பொருளை எடுத்துள்ளனர்.

நுரையீரலில் இருந்து எடுக்கப்பட்டது கோழியின் எலும்பு என மருத்துவர்கள் தெரிந்துக்கொண்டனர். பின்பு, அந்தப் பெண் தான் சிறுவயதில் சாப்பிட்ட கோழி இறைச்சியின் எலும்புதான் இது என மருத்துவர்களிடம் தெரிவித்தார். இப்போது அவர் பூரண குணமடைந்து இருமல் இல்லாத வாழ்க்கையை வாழப்போவதாக கூறி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.

 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.