சீனாவில் கடந்த 6 வாரங்களில் இல்லாத அளவுக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்திருப்பதால் அங்கு இரண்டாம் கட்ட கொரோனா பரவல் தொடங்கியுள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
சீனாவின் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ், அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கடந்த சில நாட்களாகச் சீனாவில் கட்டுக்குள் இருந்த கொரோனா வைரஸ் தற்போது மீண்டும் தலைதூக்கியிருப்பது உலக நாடுகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் 82 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 3 ஆயிரத்து 300ஐ கடந்துள்ளது. சீனாவில் நேற்று ஒரே நாளில் 108 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நோய்த் தொற்று பாதித்த 108 பேரில் 98 பேர் வெளிநாடுகளிருந்து வந்தவர்கள் எனச் சீன தேசிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
வெளிநாடுகளிலிருந்து தாயகம் திரும்பும் சீனர்களால் கொரோனா வைரஸ் மீண்டும் தலைகாட்டத் தொடங்கியிருப்பதாகக் கூறும் சீன சுகாதாரத்துறை, ரஷ்யாவை ஒட்டியுள்ள ஹைலோஜியாங் மாகாணத்திலேயே புதிதாக 58 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளது. இதனால் ரஷ்ய எல்லையைத் தீவிரமாகக் கண்காணிக்கச் சீன அரசு திட்டமிட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, சீனாவின் ஷென்சென் பகுதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பின் குணமடைந்த 172 பேரில் 15 சதவீதம் பேருக்கு மீண்டும் நோய்த் தொற்று ஏற்பட்டிருப்பது மருத்துவர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.