கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு உயிரிழந்தவரின் பிரேதத்தை வாகனத்தில் எடுத்துச் செல்லும் போதும், தகனம் செய்யும் இடத்திலும் பின்பற்ற வேண்டியவை குறித்து சுகாதாரத்துறை சில வழிமுறைகளை வகுத்துள்ளது.
அதன்படி,
- இறந்தவரது உடலை வாகனத்தில் எடுத்துச் செல்லும்போது அதற்கென உள்ள பிளாஸ்டிக் பையில் வைத்து முழுமையாக சுற்றி வைக்கவேண்டும். அந்த பிளாஸ்டிக் பையின் மீது 1% சோடியம் ஹைப்போ குளோரைட் கொண்டு தூய்மைப்படுத்த வேண்டும்.
- இறந்தவரின் உடலைக் கையாள்பவர்கள் அறுவை சிகிச்சை முகக் கவர், கையுறைகள் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை அணிந்திருக்க வேண்டும்.
- தகனம் செய்யும் இடத்தில் உடலை ஒப்படைத்த பின்னர் அந்த வாகனத்தை 1% சோடியம் ஹைப்போ குளோரைட் கொண்டு சுத்தப்படுத்த வேண்டும்.
- தகனம் அல்லது அடக்கம் செய்யும் இடத்தில் இறந்தவரின் மிகநெருங்கிய உறவினர்களை மட்டுமே அனுமதிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவ்விடத்தில் கட்டாயம் தனிமனித விலகலைக் கடைபிடிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
- இறந்தவரின் உடலை உறவினர்கள் பார்க்க விரும்பினால் முகத்தை மட்டும் திறந்து காட்டவும், குறிப்பிட்ட பணியாளரைத் தவிர வேறு எவரும் உடலைக் கையாள அனுமதிக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- இறந்தவரின் உடலைத் தொடாமல் செய்யக்கூடிய மத சம்பந்தமான சடங்குகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதாவது தகனத்தின் போது மத நூல்களைப் படித்தல், புனித நீர் தெளித்தல் போன்றவற்றை செய்து கொள்ளலாம்.
- இறந்தவரின் உடலை குளிப்பாட்டுதல், கட்டி அணைத்தல், முகத்திற்கு முத்தமிடுதல் போன்றவற்றை செய்ய அனுமதி அறவே மறுக்கப்பட்டுள்ளது.
- தகனம் முடிந்த பின்னர் அவ்விடத்தில் இருந்த பணியாளர்கள் மற்றும் இறந்தவரின் உறவினர்கள் உரிய சுகாதார முறைகளைக் கடைபிடிக்க வேண்டும். தகனத்திற்கு பின் சாம்பலை சடங்குகளுக்காக குடும்பத்தினரிடம் வழங்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது