பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் உள்ள நிலையில், அங்கு பிரதமர் அலுவலகப் பணிகளை மேற்கொள்ளும் அதிகாரத்திற்கான பட்டியலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், வீட்டிலிருந்தபடியே அலுவலகப் பணிகளை மேற்கொண்டு வந்தார். அவருக்கு வைரஸ் தொற்று தீவிரமடையவே கடந்த 5ஆம் தேதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். எனவே பிரதமர் அலுவலகப் பணிகளை பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சர் டாம்னிக் ராப் தொடர்வார் என டவுனிங் ஸ்ட்ரீட் வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.
அச்சுறுத்தும் கொரோனா… நவீன கொள்ளையில் ஈடுபடும் அமெரிக்கா..? எச்சரிக்கும் நாடுகள்..!
இந்நிலையில் டாம்னிக் ராபால் சமாளிக்க முடியாத பட்சத்தில் பிரதமர் அலுவலகப் பணிகளை இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும், பிரிட்டனின் நிதியமைச்சருமான ரிஷி சுனக் மேற்கொள்வார் என டவுனிங் ஸ்ட்ரீட் வட்டாரம் தெரிவித்துள்ளது. பிரிட்டனின் அதிகாரப் படிநிலைகளில் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு அடுத்தபடியாக நிதியமைச்சருக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
அதனடிப்படையில் பிரிட்டன் பொருளாதாரத்தைத் திறம்பட நிர்வகித்து வரும் ரிஷி சுனக்கே பிரதமர் அலுவலகப் பணிகளை மேற்கொள்பவர்களுக்கான அதிகாரப் பொறுப்பைப் பெறுவார் எனக் கூறப்படுகிறது. 39 வயதே நிரம்பியுள்ள ரிஷி சுனக் இன்போஸிஸ் நிறுவனத்தலைவர் நாராயண மூர்த்தியின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது.