பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதி தெரியவந்தது. இதையடுத்து, லண்டனில் உள்ள அவரது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. இருப்பினும் ஜான்சனுக்கு காய்ச்சல், சளி, இருமல் குறையவில்லை. ஏப்ரல் 5-ம் தேதி, மத்திய லண்டனில் உள்ள புனித தாமஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

போரிஸ் ஜான்சன் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியானது. மேலும், அவரது உடல்நிலை மோசமானதால் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டுவருவதாக பிரிட்டன் ஊடகங்களில் செய்தி வெளியானது. மருத்துவக்குழு, ஜான்சனை தொடர்ந்து கண்காணித்துவந்தது.
Also Read: `ராட்சதச் சவக்குழிகள்; அடுக்கடுக்காக சவப்பெட்டிகள்’- ஹார்ட் தீவுகளில் புதைக்கப்படும் சடலங்கள்
போரிஸ் ஜான்சன் சுயநினைவு இழந்தால், அவருக்குப் பதிலாக அலுவல் பணிகளை வெளியுறவுத்துறை செயலர் டொமினிப் ராப் கவனிப்பார் என்ற தகவல் வெளியானது. இத்தகைய தகவல்கள் பிரிட்டன் மக்களை கவலைகொள்ளச் செய்தது. மருத்துவர்களின் தொடர் சிகிச்சை காரணமாக, அவரது உடல்நிலை முன்னேற்றமடைந்தது. செயற்கை சுவாசக் கருவிகள் இல்லாமல் மூச்சுவிடும் அளவுக்கு அவரது உடல்நிலை தற்போது முன்னேற்றம் அடைந்துள்ளது.

போரிஸ் ஜான்சனின் வருங்கால மனைவி கேரி சைமண்ட்ஸ், பிறக்கப்போகும் தங்களது குழந்தையின் ஸ்கேன் ரிப்போர்ட்டுகளை ஜான்சனுக்கு அனுப்பி நம்பிக்கையூட்டி வருகிறார். இன்னும் இரண்டு மாதங்களில் அவருக்கு குழந்தை பிறக்க உள்ளது.
ஜான்சனுக்கும் அவரது காதலி கேரி சைமண்ட்ஸுக்கும் கடந்த ஆண்டு இறுதியில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இருவரும் விரைவில் திருமணம் செய்துக்கொள்ள இருந்த நிலையில், ஜான்சன் கொரோனா தாக்கம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் ஜான்சன் அனுமதிக்கப்பட்ட நாளில் இருந்து இருவரும் சந்தித்துக்கொள்ளவில்லை. கடிதங்கள் மூலம் மட்டுமே உரையாடல்கள் தொடர்கிறது.

பிரதமர் போரிஸ் ஜான்சன், தற்போது ஐசியூவில் இருந்து சாதாரண பிரிவுக்கு மாற்றப்பட்டார். தற்போது, மருத்துவமனையிலிருந்து போரிஸ் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், புனித தாமஸ் மருத்துவமனை ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்து ஒரு சிறிய அறிக்கையை பிரதமர் வெளியிட்டுள்ளார். அதில், “நான் ஒரு புதிய வாழ்க்கையைப் பெற்றுள்ளேன். நான் அவர்களுக்கு எவ்வளவு நன்றி கூறினாலும் அது போதாது. என் வாழ்நாள் முழுவதும் நான் அவர்களுக்கு கடமைப்பட்டிருக்கிறேன்” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். பிரதமர், மேலும் சில வாரங்களுக்கு ஓய்வு எடுத்துக்கொண்டு, பின்னர்தான் பணிக்குத் திரும்புவார் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.