கொரோனா தொற்று ஏற்பட்டு லண்டன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் வீடு திரும்பியுள்ளார்.
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கடந்த மாதம் 27 ஆம் தேதி கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இருப்பினும் அவர் வீட்டிலிருந்த படியே பிரதமர் அலுவலகப் பணிகளை மேற்கொண்டு வந்தார். இதையடுத்து மருத்துவர்களின் ஆலோசனைப்படியும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் போரிஸ் ஜான்சன் கடந்த 5 ஆம் தேதி லண்டன் செயிண்ட் தாமஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவரது உடல்நிலை மோசமடையவே கடந்த 6 ஆம் தேதி தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றப்பட்டார். இரு தினங்கள் தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்த ஜான்சன், உடல்நிலையில் முன்னேற்றம் காணவே கடந்த 10 ஆம் தேதி சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார்.
தொடர்ந்து அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகளின் பலனாக போரிஸ் ஜான்சன் தற்போது வீடு திரும்பியுள்ளதாக டவுனிங் ஸ்ட்ரீட் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். பிரதமர் போரிஸ் ஜான்சன் வீடு திரும்பினாலும் அரசுப் பணிகளை தற்போது தொடர முடியாது என மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். போரிஸ் ஜான்சன் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் பிரதமர் அலுவலகப் பணிகளை பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சர் டோம்னிக் ராப் மற்றும் நிதி அமைச்சர் ரிஷி சுனக் ஆகியோர் கண்காணித்து வருகின்றனர்.