பிரதமர் நரேந்திர மோடி மாநில முதலமைச்சர்களுன் இன்று ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆலோசனையில் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க வேண்டும் என பல்வேறு மாநில அரசுகள் வலியுறுத்தியுள்ளதாக தெரிகிறது. இந்த ஆலோசனைக்கு பிறகு மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் ஏப்ரம் 30-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அமைச்சரவைக் கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுமா முதலமைச்சரிடம் அறிவிப்பு வெளியாகுமா என மக்கள் எதிர்பார்த்திருந்தனர்.
அமைச்சரவை கூட்டத்துக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த தமிழக தலைமை செயலாளர் சண்முகம், “கொரோனா வைரஸ் குறித்த விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்த கருத்துகளையும் பிரதமருடனான ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு மாநில முதல்வர்கள் எடுத்துரைத்த கருத்துகளை அமைச்சரவைக் கூட்டத்தில் முதல்வர் எடுத்துரைத்தார். ஊரடங்கு உத்தரவும் ஒரு மாநிலத்தில் மட்டும் செயல்படுத்தினால் முழு பலனையும் அடைய முடியாது. இதனையடுத்து நாடு முழுவதும் ஊரடங்கு தொடர்பான அறிவிப்பை பிரதமர் அறிவிக்கவுள்ளார். பிரதமர் எடுக்கும் முடிவு ஏற்று அதன்படி செயல்பட அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டது.

இன்றிரவு 8 மணிக்கு பிரதமர் நாட்டு மக்களுடன் உரையாற்றவுள்ளார். பிரதமர் என்ன முடிவை அறிவிக்கிறாரோ அதன்படி ஊரடங்கு உத்தரவை தமிழக அரசு எடுக்கும். பிரதமர் உரை குறித்து இன்னும் முடிவாகவில்லை. அவரது அறிவிப்புகளின் படி நாங்கள் செயல்படுவோம். கொரோனா பரிசோதனைக்கு தேவையான கருவிகள் நம்மிடம் உள்ளது. தமிழகத்தில் இதுவரை 9,527 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று மேலும் 58 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 969-ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10-ஆக உயர்ந்துள்ளது.
ஊரடங்கு என்பது ஒரு மாநிலம் எடுக்கக்கூடிய முடிவு இல்லை. இது நாடு தழுவிய பிரச்னை. பிரதமர் என்ன அறிவிக்கிறாரோ அதையொட்டிதான் நாம் முடிவு எடுக்க முடியும். ஒரு சில மாநிலங்கள் சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன. பிரதமர் எத்தனை நாள்கள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்துவார் என தெரியாது. தமிழகத்தை பொறுத்தவரையில் இந்தியா கொரோனா நோய்த் தொற்று உள்ள மாநிலங்களில் இரண்டாம் இடத்தில் உள்ளது. அதன்காரணமாக நாம் மற்ற மாநிலங்களை போல் அறிவிப்புகளை வெளியிட முடியாது. இந்தியாவில் ஏப்ரல் 15-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. நமக்கு போதுமான காலம் இருக்கிறது. ஊரடங்கை அமல்படுத்த அவசரம் காட்டத் தேவையில்லை.

பரிசோதனையை வேகப்படுத்தவே ரேபிட் டெஸ்ட் கிட் தேவைப்படுகிறது, அது இன்னும் வந்து சேரவில்லை. ஆனால் நம்மிடம் போதுமான பி.சி.ஆர்., கிட் இருக்கிறது. தமிழகத்தில் போதுமான அளவு இருப்பதால் பரிசோதனைகளை மேற்கொண்டு இருக்கிறோம். கொரோனா பரிசோதனை வேகப்படுத்த அரசு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் அரசு மருத்துவ கல்லூரிகளில் கொரோனா ஆய்வகங்கள் ஏற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது,” என்றார்.