`வுகான்’ சீனாவில் இருக்கும் பரபரப்பான நகரங்களில் ஒன்று. கொரோனா தாக்கம் காரணமாக முதலில் முடக்கப்பட்டதும் இந்த நகரம்தான். பல மாதங்களுக்குப் பிறகு வுகான் மக்கள் இயல்புவாழ்க்கைக்குத் திரும்பியுள்ளனர். இப்போது அங்கு ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டுள்ளது. மருத்துவ நகரம் என அழைக்கப்படும் வுகானிலிருந்துதான் கொரோனா வைரஸ் உலக நாடுகளுக்குப் பரவியது என்பது எல்லோரும் அறிந்தது. இப்போது வுகானைப் பற்றிப் பேச என்ன இருக்கிறது என நினைக்கலாம்.

`கொரோனா வைரஸைச் சுமந்துகொண்டு என் தாய்நாட்டுக்குச் செல்ல விரும்பவில்லை ‘ எனக் கூறி கடுமையான லாக்டவுன் காலத்திலும் வுகானில் 77 நாள்களைத் தனிமையில் கழித்துள்ளார் கேரளத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவியான அனிலா பி அஜயன். இதன்காரணமாகத்தான் வுகானை நினைவுப்படுத்த வேண்டியிருந்தது.
இந்தியாவில் இப்போது 21 நாள் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. தாய்நாட்டில் சொந்த ஊரில் உறவுகளோடு இருக்கிறோம். நம்மில் சிலர் ஊரடங்கு உத்தரவுக்குச் செவிசாய்க்காமல் ஊர் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள். காவல்துறையினர் தங்களது பாணியில் அவர்களைக் கவனித்து அனுப்புகிறார்கள். அனிலாவோ தன்னால் தன் தாய்நாட்டுக்கும் தான் மருத்துவம் பயில வந்திருக்கும் இடத்துக்கும் எந்தப் பிரச்னையும் ஏற்படக்கூடாது என்ற எண்ணத்தில் கடந்த 3 மாத லாக்டவுன் காலத்தை வீட்டில் தனிமையில் கழித்துள்ளார்.

லாக்டவுன் நாள்களும் அனிலாவும்
“வுகானில் லாக்டவுன் காலத்தில் நான் அதிகம் கேட்டது ஆம்புலன்ஸ்களின் சைரன் சத்தங்களும் வானொலியில் சீன மொழியில் வெளியாகும் அறிவிப்புகளும்தான். லாக்டவுன் நாள்களில் நான் சந்தித்த மனிதர்கள், பேராசிரியர்கள் உட்பட அனைவரின் முகங்களும் இறுக்கமாக இருந்தன. இப்போது அந்த முகங்களில் மகிழ்ச்சியைக் காண முடிகிறது. இப்போது மாற்றங்களைக் காண முடிகிறது. சாலைகள் மீண்டும் பரபரப்பாகின்றன. வீதிகளில் மக்கள் பாடும் சத்தங்களைக் கேட்க முடிகிறது.
Also Read: ` ஒரு மாத பென்ஷன்; சுகாதாரப் பணியாளர்களுக்கு மாஸ்க்..!’ – அசரவைக்கும் 95 வயது மூதாட்டியின் சேவை
உண்மையில் கொரோனா குறித்து எனக்கு மிகுந்த அச்சம் இருந்தது. நான் வெளியில்தான் அதிக நேரம் செலவழித்திருந்தேன். பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்தியிருந்தேன். உணவுகளையும் வெளியில்தான் எடுத்துக்கொண்டேன். இதன்காரணமாகவே நான் கேரளா வருவதை தவிர்தேன். எந்த அறிகுறியும் இல்லாமல் ஒருவர் கொரோனா தாக்கத்துக்கு உள்ளாகலாம் எனப் படித்திருந்தேன்.

விமானத்தில் பயணிப்பது ஆபத்தானது என்பதை உணர்ந்தேன். அதனால் வுகானில் என்னைத் தனிமைப்படுத்திக்கொண்டேன். மேலும் வுகானுக்கான விமான சேவை ரத்து செய்யப்படும் செய்தியை அறிந்தேன். ஆராய்ச்சி படிப்பு இரண்டு ஆண்டு காலம்தான். நான் இந்தியாவுக்குத் திரும்பிவிட்டால் என்னால் ஜூன் மாதம் வரை வுகானுக்குத் திரும்ப முடியாது என எனக்கு தெரியும். அதனால் இங்கே தங்கிவிடுவது என முடிவுசெய்தேன். ஆனால் இந்த நாள்கள் அவ்வளவு எளிதானதாக இல்லை.
நான் தங்கியிருந்த கட்டடத்தில் நிறைய மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் தங்கியிருந்தனர். ஆனால் லாக்டவுன் காலத்தில் யாரும் இங்கு இல்லை. சீன மாணவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்பியிருந்தனர். அந்தக் கட்டடத்தின் இரண்டாவது தளத்தில் நான் மட்டும் தனியாக இருந்தேன். வேறு சில வெளிநாட்டு மாணவர்கள் முதலாவது தளத்தில் தங்கியிருந்தனர்.
அந்த நாள்கள் அமைதியாகக் கழிந்தன. ஆம்புலன்ஸின் சைரன் ஒலிகள் என்னை ஏதோ செய்தன. அவை என்னை அச்சமூட்டுவதைப் போன்று உணர்ந்தேன். என்னால் இரண்டு மணி நேரம்கூட நிம்மதியாகத் தூங்க முடியவில்லை.

லாக்டவுன் காலத்தில் வுகானின் மருத்துவக் குழுவினர் ஒவ்வொருவரின் வீட்டுக்கு வந்து அவர்களின் உடல்நலனைப் பரிசோதனை செய்தனர். கோவிட்19 அறிகுறிகள் இருந்தவர்களின் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டன. பலருக்கு நோய் அறிகுறிகள் இல்லாமல் இருப்பது தெரியவந்தது. வுகானில் அப்போது நோய்வாய்ப்பட்டவர்களின் எண்ணிக்கை செங்குத்தாக உயர்ந்து இருந்தும் அவர்கள் தொடர்ந்து தங்களது பணியை மேற்கொண்டனர்.
Also Read: `கிரிக்கெட் பொறுமையாக ஆடலாம்; வாழ்க்கையைவிட எதுவும் பெரியதல்ல!’ – கபில் தேவ்
லாக்டவுன் நீக்கப்பட்டாலும் நகரத்தில் இப்போதும் அதிகப்படியான கட்டுப்பாடுகள் இருக்கின்றன. இங்கு ஷாப்பிங் சென்றால்கூட அங்கு தெர்மல் ஸ்கேனிங் வைத்துள்ளனர். உடலின் வெப்பநிலை 37.2 டிகிரி செல்சியஸுக்கு மேல் இருந்தால் உள்ளே அனுமதிக்கப்படுவதில்லை. காலை நேரம் முதியவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அவர்கள் தங்களுக்குத் தேவையான பொருள்களைக் கடைகளில் பெற்றுக்கொள்ளலாம்.

அலுவலகங்களில் சென்று பணிபுரிய விரும்பினால் அங்கும் உங்களுக்குப் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அதன்பின்னரே அனுமதி வழங்கப்படுகிறது. 2 மணி நேரத்துக்கு மேலாக எந்த மீட்டிங்கும் நடப்பதில்லை. அலுவலகத்தில் எல்லோரும் மாஸ்க் அணிந்துதான் உள்ளனர். லாக்டவுன் போன்ற கடுமையான நேரத்தில் வுகான் மக்கள் அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கினர்’ என்கிறார் அனிலா.
News Source: The New Indian Express