கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட டெல்லியைச் சேர்ந்த நபர், சுகாதாரத்துறையின் அலட்சியத்தால் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் இருந்து தப்பியோடினார். அவரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கொரோனாவுக்கு எதிராக தமிழகம் போராடி வரும் நிலையில் விழுப்புரத்தில் அரசு மருத்துவமனையில் பெரிய குழப்பம் நடந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை விழுப்புரம் அரசு மருத்துவமனையில் இருந்து 26 நோயாளிகளை வீட்டிற்கு அனுப்பியுள்ளனர். ஆனால் அனுப்பட்ட 26 பேரில் 4 பேருக்கு கொரொனா தொற்று இருந்தது பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது.
உடனடியாக அனுப்பப்பட்ட நோயாளிகளை தேடிப்பிடித்த சுகாதாரத்துறை 3 பேரை மீண்டும் சிகிச்சைக்கு கொண்டுவந்துவிட்டது. ஆனால் ஒருவரை மட்டும் பிடிக்கமுடியவில்லை. அவர் விஷயத்தில் ஒரு குழப்பம் ஏற்பட்டதே இதற்கு காரணம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
அதாவது, டெல்லியைச் சேர்ந்த 35வயது நபர், கார் திருட்டு வழக்கில் புதுச்சேரி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கடந்த மாதம் 16ஆம் தேதி சிறையில் இருந்து விடுதலையான அவர், புதுச்சேரி மற்றும் விழுப்புரம் பகுதிகளில் சுற்றித் திரிந்துள்ளார். ஊரடங்கு அமல்படுத்திய பிறகு விழுப்புரத்தில் முகாமிட்டிருந்த அந்த இளைஞருக்கு கொரோனா தொற்று இருக்குமோ என்ற சந்தேகத்தில் கட்டுப்பாட்டு அறைக்கு அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் விழுப்புரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த நபருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது நேற்று உறுதியானது. இந்த நிலையில் அவர் மருத்துமனையில் இருந்து வெளியேறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நோய்த் தொற்று இல்லை என பரிசோதனை முடிவு வந்த நபரை அனுப்புவதற்குப் பதில், மருத்துவமனை நிர்வாகம் தவறுதலாக டெல்லி நபரை டிஸ்சார்ஜ் செய்துவிட்டதாக கூறப்படுகிறது. அதனால் அவரைப்பிடிப்பதில் சிக்கல் நிலவுகிறது. தற்போது அவரை தேடப்படும் நபராக விழுப்புரம் மாவட்ட மக்கள் தொடர்புத்துறை அறிவித்துள்ளது. ஏதேனும் உதவியை நாடி அவர் டெல்லி செல்ல திட்டமிட்டிருக்கலாம் என்பதால் தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அவர் பற்றி தகவல் தெரிந்தால், 04146-223265 என்ற எண்ணுக்கு தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதனிடையே 3 தனிப்படைகள் அமைத்து டெல்லி நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
60 வயதுக்கு மேற்பட்டோரே கொரோனாவால் அதிகம் இறப்பு : புள்ளி விவரங்கள்