மக்களிடமிருந்து அதிகமாகப் பிடித்தம் செய்யப்படும் வருமான வரித் தொகையையும் தொழில்முனைவோர்களிடமிருந்து ஜி.எஸ்.டி வரித் தொகையையும் நிலுவையில் வைத்திருந்து கணக்குகளைச் சரிபார்த்த பிறகு, அதை உரியவர்களிடத்தில் வரித்துறையானது வழங்கும். இப்படி, மக்களிடமிருந்து பிடித்தம் செய்யப்பட்ட பல லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான தொகை வருமான வரித்துறையிடம் நிலுவையில் இருக்கிறது.
கொரோனா நோய்த்தொற்று பரவலால் மக்கள் நிதி நெருக்கடியில் தவித்து வருவதால், நிலுவையிலிருக்கும் வரித் தொகையை உடனடியாக திருப்பி அளிக்க வருமான வரித்துறை முடிவுசெய்துள்ளது.
அதன்படி ரூ.5 லட்சம் வரை கூடுதலாக வரி செலுத்தியவர்களுக்கு, அந்தத் தொகையை உடனடியாக திருப்பி அளிக்கப்படும். இதன் மூலம் 14 லட்சம் பேர் பயனடைவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் கூடுதலாகச் செலுத்திய சரக்கு-சேவை வரி மற்றும் சுங்க வரியைத் திருப்பி அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் ஒரு லட்சம் நிறுவனங்கள், ரூ.18,000 கோடி வரை பெற்று பயனடைவார்கள்.
Also Read: தனிநபர் வருமான வரி தாக்கல்: தெரிந்துகொள்ள வேண்டிய 4 நிபந்தனைகள்!
இந்தியாவில் வருமானவரி செலுத்துவோர், தாங்கள் செலுத்திய அதிகமான தொகையைத் திரும்பப் பெறுவதற்கு வருமானவரி தாக்கல் செய்த நாளிலிருந்து இரண்டு அல்லது மூன்று மாதங்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. மேலும், இந்தக் கூடுதல் வரி தொகையைத் திரும்பப் பெறுவதில் நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதால் வரி செலுத்துவோர் அந்தத் தொகையைத் திரும்பப் பெறுவதில் சிரமத்தைச் சந்தித்து வந்தனர். இந்நிலையில், தற்போது கொரோனா நோய்த் தொற்றால் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலைச் சமாளிக்கும் பொருட்டு மத்திய அரசு கூடுதலாகச் செலுத்தப்பட்ட வருமான வரி மற்றும் ஜி.எஸ்.டி வரி மீதான நிலுவைத் தொகையை வழங்குவது மக்களின் தற்காலிக நிதிச் சுமையை ஓரளவுக்குக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த அறிவிப்பு குறித்து, தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ள இந்திய வருமான வரித் துறை, “நாட்டில் கொரோனா நோய்த் தொற்றால் வருமான வரி செலுத்துவோர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு இந்த நேரத்தில் ஒரு நிவாரண உதவி செய்ய விரும்புகிறோம். எனவே, இதுவரை நிலுவையில் உள்ள வருமான வரி தொகைகளை உடனடியாக திருப்பித் தருகிறோம்” எனத் தெரிவித்துள்ளது.
#GameCorner
கொரோனா அச்சம், லாக் டவுன் பரபரப்பு, வொர்க் ஃப்ரம் ஹோம் அலப்பறைகள் அத்தனைக்கும் மத்தியில் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆக இதோ ஒரு குட்டி கேம்.