கொரோனா அச்சம் காரணமாக பல்லாயிரம் அமெரிக்கர்கள் துப்பாக்கிகளை வாங்கி குவித்து வருகின்றனர்.
உலகமே கொரோனா அச்சத்தாலும் அதன் பாதிப்புகளாலும் முடங்கிக் கிடக்கிறது. இந்நிலையில், அமெரிக்க மக்கள் வரிசையில் நின்று துப்பாக்கிகளை வாங்கிச் செல்வதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. துப்பாக்கி வாங்குவதற்காக ஒருவர் விண்ணப்பித்தால் அவரது பின்னணி என்ன எனத் தீவிரமாக விசாரிக்கப்படும். துப்பாக்கி வைத்துக் கொள்ளத் தகுதியான நபர் என ஒருமுறை அங்கீகரிக்கப்பட்டால் அவர் எத்தனை துப்பாக்கிகளை வேண்டுமானாலும் வாங்கி வைத்துக் கொள்ளலாம் என்கிறது அமெரிக்கச் சட்டம். FBI தகவலின் படி கடந்த ஒரே மாதத்தில் துப்பாக்கி வைத்துக் கொள்ள விண்ணப்பித்தவர்களில் 3.7 மில்லியன் அமெரிக்கர்களின் பின்னணி சோதனை செய்யப்பட்டிருக்கிறது.
தமிழகத்தில் மேலும் 48 பேருக்கு கொரோனா: பாதிப்பு 738 ஆக உயர்வு
அமெரிக்க ஊடகங்கள் வெளியிட்டிருக்கும் தகவலின் படி, கடந்த ஒரு மாதத்தில் மட்டுமே 20 லட்சம் துப்பாக்கிகள் அமெரிக்காவில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதில் 5 லட்சம் துப்பாக்கிகளை டெக்ஸாஸ், ஃப்ளோரிடா, கலிபோர்னியா ஆகிய மாகாணங்களைச் சேர்ந்தவர்கள் வாங்கியிருக்கிறார்கள். மார்ச் 21’ஆம் தேதி ஒரே நாளில் மட்டும் 2 லட்சம் விண்ணப்பங்கள் பரிசோதனை செய்து முடிக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது முன்னெப்போதும் இல்லாத அதிகபட்ச எண்ணிக்கையாகும்.
“கொரோனா பாதிப்பின் விளைவுகள் வரும் காலங்களில் மேலும் அதிகரிக்கும். அதன் காரணமாக தமது உடைமைகள் சூறையாடப்படலாம். உணவுக்காகப் பெரிய அளவில் வன்முறை நிகழலாம். அதிலிருந்து தற்காத்துக் கொள்ளவே துப்பாக்கிகளை வாங்குகின்றோம்.” என்கின்றனர் அமெரிக்கர்கள் பலர்.
நியூயார்க், நியூ மெக்ஸிகோ உள்ளிட்ட சில மாகாணங்கள் துப்பாக்கி விற்பனை நிலையங்களை மூட தற்போது உத்தரவிட்டுள்ளது. எனினும் இணையதளம் மூலம் துப்பாக்கிகளை வாங்க அம்மாகாணங்கள் அனுமதியளித்திருப்பதாகவே தெரிகிறது., மேலும் வாசிங்டனில் துப்பாக்கி விற்பனை தற்போது தடை செய்யப்பட்டிருக்கிறது ஆனாலும் விதிகளை மீறி அங்கு துப்பாக்கி விற்பனை ஜோராக நடைபெற்று வருகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM