தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. சேலத்தில் கொரோனா தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு பலரும் இருந்து வருகிறார்கள். இவர்களில் சிலர் திடீரென மரணமடைந்துள்ளது சேலம் மாவட்ட மக்களிடம் பெரும் அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தி இருக்கிறது.
சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் அறிகுறிகள் இருப்பதாகச் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 31 பேரில் 12 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதவிர டெல்லி மாநாடு சென்று வந்தவர்கள், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் என வீட்டில் பலரும் தனிமைப்படுத்தப்பட்டுக் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில், டெல்லி மாநாட்டுக்குச் சென்றுவந்த சூரமங்கலம் தர்மநகர் பகுதியைச் சேர்ந்தவர் வீட்டில் மாநகராட்சி சார்பாக ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு வீட்டில் தனிமையில் இருந்தவர் திடீரென கடந்த 3-ம் தேதி மரணமடைந்தார். அவர் கொரோனாவால் உயிரிழக்கவில்லை. சுகர் அதிகமானதால் இறந்ததாக மாவட்ட சுகாதாரத்துறை அறிவித்தது.
அதேபோல சீலநாயக்கன்பட்டியைச் சேர்ந்த 52 வயது மதிக்கத்தக்க ரிக் வண்டி டிரைவர் ஒருவர் பல மாநிலங்களுக்குச் சென்று 8 நாள்களுக்கு முன்பு சேலம் வந்தார். அதனால் சேலம் மாநகராட்சி சார்பாக அவரை வீட்டில் தனிமையாக இருக்க அறிவுறுத்தியதோடு அவருடைய வீட்டில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.
இந்த நிலையில், நேற்றுமுன்தினம் இரவு 10 மணிக்கு திடீரென மரணம் அடைந்துள்ளார். அவர் கொரோனாவால் உயிரிழக்கவில்லை. அளவுக்கு அதிகமாக மது அருந்தி கல்லீரல் கெட்டுப்போனதால் மரணம் அடைந்ததாக மாவட்ட சுகாதாரத்துறை கூறியது.
இவர்களின் மரணத்துக்குச் சுகாதாரத்துறை காரணங்களைச் சொன்னாலும், அவர்கள் வசித்த பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதால் அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். உண்மையாகவே சுகாதாரத்துறை சொல்லும் காரணத்தால் இறந்தார்களா? இல்லை முதல்வர் மாவட்டம் என்பதால் கொரோனா உயிரிழப்பை மறைக்கிறார்களா? என்ற பீதியும் அடைந்துள்ளனர்.
இதுபற்றி மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர் நிர்மல்சன், “உண்மையிலேயே இந்த இரண்டு பேரும் கொரோனா தொற்றால் மரணமடையவில்லை. ஒருவர் சுகர் அதிகமானதால் உயிரிழந்துள்ளார். இன்னொருவர் மதுவால் மரணமடைந்துள்ளார். கட்டுப்பாடு இல்லாத நாள்பட்ட நோய்க்குத் தொடர் சிகிச்சை எடுத்துக்கொள்ளாததால் மரணம் அடைந்துள்ளனர். மக்கள் நாள்பட்ட நோய்க்குத் தொடர்ந்து சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். கொரோனா தொற்று அனைவரையும் உயிரிழக்கச் செய்வதில்லை. தொடர் சிகிச்சை எடுத்துக்கொள்ளாத நாள்பட்ட நோயுடையவர்களை அதிகமாகத் தாக்கி உயிரிழப்பை ஏற்படுத்துகிறது. அதனால் சுகர், பிரஷர் உடையவர்கள் தொடர் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்” என்றார்.